முல்லைப் பெரியாறு போராட்டத்தால் கேரள அரசுப் பேருந்துகளுக்கு கடும் பாதிப்பு
கேரள அரசின் போக்குவரத்துக் கழகமான கேஎஸ்ஆர்டிசி மூலம் 427 பஸ்கள் வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்துகளில் பல தமிழகத்தின் வழியாகத்தான் இயக்கப்படுகின்றன. கேரளாவில் தமிழர்களின் வாகனங்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்திலும் கேரள வாகனங்களுக்கு எதிராக போராட்டம் வெடித்தது.
பல்வேறு இடங்களில் கேரள அரசுப் போக்குரவத்துக் கழக பேருந்துகள் கல்வீச்சுத் தாக்குதலுக்குள்ளாகின. இதையடுத்து கடந்த 3 நாட்களில் 100 க்கும் மேற்பட்ட அரசு பஸ்களை நிறுத்தி விட்டனர்.
கோவை-சேலம், கம்பம்-தேனி, தென்காசி,-திருநெல்வேலி மார்க்கத்தில் கேரள அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டு விட்டன. நாகர்கோவில் ரூட்டில்தான் கேரள அரசுப் பேருந்துகளுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையாம். அதேபோல பழனி-பொள்ளாச்சி பாதையிலும் பெரிய அளவில் பிரச்சினை இல்லையாம்.
தமிழகத்தில் போராட்டம் வலுத்துள்ளதைத் தொடர்ந்து பெங்களூர் மற்றும் கர்நாடக நகரங்களுக்குச் செல்லும் அரசுப் பேருந்துகளை, கோழிக்கோடு, வயனாடு, மைசூர் வழியாக சுற்றி விடுகின்றனர்.
இதன் காரணமாக கேரள அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.