ஐரோப்பிய நிதி சிக்கல் மேலும் மோசமாகிறது.. யூரோ மதிப்பு தொடர் சரிவு
லண்டன்: ஐரோப்பாவில் நிலவும் நிதித் தட்டுப்பாடு, கடன் நெருக்கடியை சமாளிக்க யூரோ கூட்டமைப்பு நாடுகள் உடனடித் தீர்வு எதையும் சொல்லாததையடுத்து யூரோ கரன்சியின் மதிப்பு சரிந்துள்ளது.
டாலருக்கு நிகரான ஒரு யூரோவின் மதிப்பு 0.4 சதவீதம் அளவுக்குக்கு குறைந்து 1.33 ஆனது. மே மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 10 சதவீத சரிவாகும்.
யூரோ மண்டலப் பொருளாதார நெருக்கடிக்கு நீண்ட கால அடிப்படையில் தீர்வு காண பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சில் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் இரு நாட்களுக்கு முன் ஆலோசனை நடத்தினர்.
அதில், நிதித் தட்டுப்பாடு, கடன் நெருக்கடியை சமாளிக்க தத்தமது நாடுகளின் வரி விதிப்பிலும், வரவு செலவுத் திட்டத்திலும் மாற்றங்களைச் செய்ய அந்த நாடுகள் ஒப்புக் கொண்டன. மேலும் மிகவும் சிக்கலில் உள்ள நாடுகளுக்கு உதவ சர்வதேச பொருளாதார நிதியத்துக்கு (International Monetary Fund) 200 பில்லியன் டாலர் அளவுக்கு நிதி வழங்குவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. ஆனால், இதை பிரிட்டன் ஏற்கவில்லை.
மேலும், இக் கூட்டத்தில் ஐரோப்பிய கடன் பிரச்சனைக்கு உடனடித் தீர்வு ஏதும் எட்டப்படவும் இல்லை. கடும் நிதித் தட்டுப்பாட்டில் உள்ள ஐரோப்பிய வங்கிகளுக்கு உதவும் திட்டமும் முன் வைக்கப்படவில்லை.
இதையடுத்து இன்று ஆசிய பங்குச் சந்தைகளில் யூரோ கரன்சியின் மதிப்பு சரிந்தது. அமெரிக்கப் பங்குச் சந்தையிலும் இது எதிரொலிக்கும் என்று தெரிகிறது.
மேலும் ஐரோப்பாவில் நிலைமை மேலும் மோசமாகும் என்றும், யூரோவின் மதிப்பு தொடர்ந்து சரியும் என்றும் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.