கிரகணத்தால் ஆண்களுக்கு ஆபத்து என வதந்தி: தர்மபுரியில் விளக்கு வைத்து பூஜை செய்த பெண்கள்
தர்மபுரி: சந்திர கிரகணத்தால் ஆண்களுக்கு ஆபத்து ஏற்படும் என்ற தகவல் பரவியதை அடுத்து தர்மபுரி பகுதி பெண்கள் வீடுகளில் விளக்கேற்றி வைத்து இறைவனை வழிபட்டனர்.
தமிழகத்தில் நேற்று முன்திமனம் மாலை 6.14 மணிக்கு துவங்கிய சந்திர கிரகணம் இரவு 9.47 மணி வரை நீடித்தது. சேலம், நாமக்கல் தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சந்திர கிரகணம் தெளிவாகத் தெரிந்தது. இதை மக்கள் வெறும் கண்ணால் பார்த்தனர். கிரகணம் முடிந்த பிறகே சிலர் சாப்பிட்டனர்.
சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் வழக்கமாக நடத்தும் பூஜைகளை நடத்தாமல் கிரகணம் முடிந்து இரவு 10 மணிக்கு மேல் குளித்துவிட்டு பூஜை செய்தனர். சந்திர கிரகணத்தால் கோவில்களும் மூடப்பட்டன. கிரகணம் முடிந்த பிறகு நடைதிறக்கப்பட்டு பரிகாரப் பூஜைகள் நடந்தன.
இந்த சந்திர கிரகணத்தால் ஆண்களுக்கு ஆபத்து ஏற்படும் என்ற தகவல் தர்மபுரி மாவட்டத்தில் காட்டுத் தீ போல் பரவியது. இதனால் பயந்து போன பெண்கள் நேற்று காலை விடிந்தும், விடியாமலும் எழுந்து வீடுகளில் விளக்கேற்றி வைத்து இறைவனை வழிபட்டனர்.
சிலர் வெற்றிலை பாக்கு மற்றும் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து விளக்கேற்றினார்கள். இந்த பூஜை தர்மபுரி நகரில் உள்ள செந்தில் நகர், இலக்கியம்பட்டி, கலெக்டர் அலுவலக பகுதி உள்பட பல்வேறு பகுதிகளில் நடந்தது.