நாடாளுமன்றத் தாக்குதல்: இன்று 10வது நினைவு தினம்
கடந்த 2001ம் ஆண்டு, டிசம்பர் 13ம் தேதி நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தி நாட்டையே அதிர வைத்தனர். பிரதமர் உள்ளிட்டோரை கடத்தும் நோக்குடன் ஊடுறுவிய அவர்களை பாதுகாப்புப் படையினர் தீரத்துடன் போராடி சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்தில் பாதுகாப்புப் படையினர் 8 பேர் உள்பட மொத்தம் 9 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட 5 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அப்சல் குரு உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் குருவுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அவரது கருணை மனு இன்னும் பரிசீலனையில் உள்ளதால் அவர் தூக்கிலிடப்படாமல் உள்ளார். இதே வழக்கில் கைதான அப்சல் குருவின் உறவினர் சௌகத் ஹுசைன் குரு 10 ஆண்டுகள் சிறை தண்டனைக்குப் பிறகு கடந்த 2010ம் ஆண்டு டிசம்பரில் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சௌகத்தின் மனைவி மற்றும் டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.
தனி ஆளாகப் போராடி 3 தீவிரவாதிகளைக் கொன்ற மத்திய ரிசர்வ் போலீஸ் படை கான்ஸ்டபிள் டி. சந்தோஷ் குமாருக்கு சௌரிய சக்ரா விருது வழங்கப்பட்டது. தாக்குதல் குறித்து அவர் கூறியதாவது, நானும் எனது சகாக்களும் நாடாளுமன்றத்தை தாக்கிய தீவிரவாதிகளை எதிர்த்து போராடிய இடத்தை பார்க்க வேண்டும் என்று எனது குழந்தைகள் பலமுறை என்னைக் கேட்டுக் கொண்டுள்ளனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு செய்து கொடுத்த சத்தியத்தை நான் எப்பொழுது நிறைவேற்றப்போகிறேன் என்று தெரியவில்லை.
நாடாளுமன்ற தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு நான் காஷ்மீருக்கு சென்றேன். அதன் பிறகு வடகிழக்கு பகுதிக்கு சென்றுவிட்டேன். எனது குடும்பத்தை நாடாளுமன்றத்திற்கு அழைத்துச் செல்ல நேரமில்லை என்றார். அவர் தற்போது வெடிகுண்டு நிபுணர் குழுவில் உள்ளார்.