மாணவிகள் ஈவ் டீஸிங் செய்ததால் கோஷ்டி மோதல்- விவசாயி அடித்துக்கொலை
உடன்குடி: உடன்குடி அருகே பள்ளி மாணவிகளை கேலி கிண்டல் செய்தது தொடர்பாக ஏற்பட்ட கோஷ்டி மோதலில் விவசாயி அடித்து கொலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் அருகே உள்ள வேப்பங்கோடு பகுதியை சேர்ந்தவர் சித்திரைவேல்.விவசாயத் தொழில் செய்துவருகிறார். சித்திரைவேலின் மகன் கண்ணன் உடன்குடியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்டூ படித்து வருகிறான்.வேப்பகங்கோட்டில் இருந்து வாகைவிளை வழியாக உடன்குடி செல்லும் பேருந்தில் கண்ணன் தினமும் பள்ளிக்கு சென்று வருவான். அப்போது அவன் அதே பஸ்சில் பயணம் செய்து வந்த வாகைவிளை பகுதியை சேர்ந்த பள்ளி மாணவிகளை கேலி கிண்டல் செய்துள்ளான். இது அடிக்கடி தொடர்ந்ததால் வெறுப்படைந்த மாணவிகள், மாணவன் கண்ணனின் செயல்பாடுகள் குறித்து தங்களது ஊரை சேர்ந்த வாலிபரான மூக்காண்டி மகன் சுதாகர் என்பவரிடம் கூறியுள்ளனர்.
கோஷ்டி மோதல்
உடனே அவர் திங்கட்கிழமை மாலை உடன்குடி சென்று தங்களது ஊர் மாணவிகளிடம் கேலி கிண்டல் செய்தது தொடர்பாக கண்ணனை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து சித்திரைவேல் தனது ஊர்க்காரர்கள் சிலரை அழைத்து கொண்டு இரவு 10 மணி அளவில் வாகைவிளைக்கு சென்று கண்ணனிடம் தகராறு செய்த வாலிபர் சுதாகரை தட்டிக்கேட்டார். அப்போது சித்திரை வேல் தரப்பினருக்கும், சுதாகரின் ஊர்க்காரர்களுக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது.
காயத்தால் உயிரிழப்பு
இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் உருட்டு கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர். இதில் இரு தரப்பினரும் காயம் அடைந்தனர். சித்திரைவேல் படுகாயம் அடைந்தார். அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார். அவரை அவரது ஊர்க்காரர்கள் மீட்டு உடன்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து வி்ட்டதாக தெரிவித்தனர்.
பள்ளி மாணவிகளை கேலி கிண்டல் செய்தது தொடர்பாக ஏற்பட்ட கோஷ்டி மோதலில் விவசாயி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தால் வேப்பங்கோடு மற்றும் வாகைவிளை பகுதியில் பதட்டமான சூழல் நிலவுவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சித்திரைவேல் உடல் பிரேத பரிசோதனையை அடுத்து தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.