'ஹேமமாலினியை திருப்திப்படுத்த ஜல்லிக்கட்டுக்கு தடைபோடும் ஜெய்ராம் ரமேஷ்!'
திருச்சி: நடிகை ஹேமமாலினியைத் திருப்திப்படுத்த, தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடைபோட நினைக்கிறார் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் என ஜல்லிக்கட்டு மாநில குழு நிறுவனர் அம்பலத்தரசு குற்றம்சாட்டியுள்ளார்.
இன்று திருச்சியில் அவர் பேசுகையில், "விவசாயிகளின் அறுவடைக்கால திருவிழாவின் ஒரு பகுதிதான் இந்த ஜல்லிக்கட்டு. இன்று நேற்றல்ல... பல நூறு ஆண்டுகளாக நாம் கொண்டாடி வரும் பாரம்பரிய விளையாட்டு இது.
வீரத்தை காதலித்த பெண்கள் ஜல்லிக்கட்டில் ஜெயிக்கும் வீரனையே திருமணம் செய்து கொள்ள இந்த விளையாட்டைப் பயன்படுத்தினர்.
இந்த ஜல்லிக்கட்டை கொஞ்சம் கொஞ்சமாக கொச்சைப்படுத்தி கொடூரமானது போல் சித்தரித்து அடியோடு தமிழகத்தில் இருந்து ஒழித்திட சதி திட்டம் தீட்டி வெற்றியும் பெற்றுவிட்டார்கள்.
இந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டைச் சார்ந்தவரும், நடிகையுமான தற்போது பாராளுமன்ற உறுப்பினருமான ஹேமாமாலின் ஜல்லிக்கட்டு விழாவை மிருக வதை சட்டத்தின் கீழ் தடை செய்ய வலியுறுத்தி மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷை கேட்டுக்கொண்டார். உடனே, இதை வகைப்படுத்தி முறையோடு உத்தரவு போடும் வழக்கத்தைக் கூட மறந்து தலைமேல் ஆணையாக கொண்டு ஹேமமாலினியை திருப்திபடுத்தும் வகையில் அவசர கோலமாக 11.07.2011ல் ஜல்லிக்கட்டு தடை செய்யும் ஆணையை அமல்படுத்திவிட்டார்.
ஜல்லிக்கட்டின் காளைகளை காட்சி பொருளாக காட்டி வதை செய்வதாக உண்மைக்கு புறம்பாக விளக்கம் கூறி ஜல்லிக்கட்டு தடை ஆணையை பிறப்பித்துள்ளார்.
ஆனால் கேரளா மாநிலத்தில் யானைகளை வரிசைப்படுத்தி சுற்றுலாத் துறை விழா எடுத்து வேடிக்கை காட்டுகிறது. இந்த நேரத்தில் யானைகள் மதம் பிடித்து பார்வையாளர்களையும், பொதுமக்களையும் தும்பிக்கையால் வீசி எறிய பொதுமக்கள் காயம் அடைந்ததை நாம் தொலைக்காட்சிகளில் பார்த்தோம்.
அப்படி மதம் பிடித்த யானையை காட்சி பொருளாக காட்ட தடை செய்ய மறந்த அமைச்சருக்கு, காளைகளை தடை செய்ய மட்டும் எப்படி மனம் வந்ததோ. இதே போக்குதான் முல்லைப்பெரியாறு விவகாரத்திலும் நீடிக்கிறது," என்றார்.