ஆளுநர் மாளிகையில் கிறிஸ்துமஸ் விருந்து ரத்து: ரோசைய்யா உத்தரவு
சென்னை: தமிழக ஆளுநர் மாளிகையில் நடக்கவிருந்த கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியை ஆளுநர் ரோசைய்யா ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக ஆளுநர் ரோசைய்யாவின் செயலாளர் சம்பு கலோலிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஒவ்வொரு ஆண்டும் ஆளுநர் மாளிகையில் கிறிஸ்துமஸ் விழா விருந்து நடைபெறுவது உண்டு. அதே போல இந்த ஆண்டும் வரும் 18ம் தேதி மாலை கிறிஸ்துமஸ் விழாவையொட்டி விருந்து நிகழ்ச்சி ராஜ் பவனில் உள்ள தர்பார் ஹாலில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கொல்கத்தா தனியார் மருத்துவமனையில் பெரிய அளவில் நடந்த தீ விபத்து ஏற்பட்டதன் காரணமாக கிறிஸ்துமஸ் விருந்து நிகழ்ச்சியை ஆளுநர் ரோசய்யா ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 9ம் தேதி தெற்கு கொல்கத்தாவில் உள்ள அம்ரி மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 93 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.