சாயப்பட்டறை பாய்லர் வெடிப்பு விவகாரம் - கரூர் கலெக்டர் ஷோபனா பேச்சுக்கு சிஐடியூ கண்டனம்
கரூர்: கரூர் அருகே சாயப்பட்டறையில் பாய்லர் வெடிப்பு சம்பவத்திற்கு பணியாளர்களின் கவனக் குறைவே காரணம் என்று கரூர் மாவட்ட கலெக்டர் ஷோபனா கூறியிருப்பதை, சிஐடியு கடுமையான கண்டித்து உள்ளது.
கரூர் மாவட்டம் டி.செல்லாண்டிப்பாளையத்தில் லோகநாதன் என்பவர் நடத்தி வந்த கவி கலர்ஸ் என்ற சாயப்பட்டறையில் ஏற்பட்ட பாய்லர் வெடிப்பு விபத்தில் 6 பேர் இறந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து கரூர், கோவை உள்ளிட்ட இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆனால் விபத்துக்கு காரணமான சாயப்பட்டறை உரிமையாளர் லோகநாதன் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக சாதாரண பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிறையில் இருந்து உடனே ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்.
இந்த நிலையில் சாயப்பட்டறையில் பணிபுரிந்த பணியாளர்களின் கவனக்குறைவே விபத்துக்கு காரணம் என்று மாவட்ட கலெக்டர் ஷோபனா தொழிலாளர்கள் மீது குற்றம் சாட்டி உள்ளார். இதற்கு இந்திய தொழிற்சங்க (சி.ஐ.டி.யு.) மாவட்ட செயலாளர் ஜீவானந்தம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.