பப்புவா நியூகினியாவில் 2 பிரதமர்கள் - நாட்டில் தொடரும் பெரும் குழப்பம்
பப்புவா நியூகினியா: பப்புவா நியூகினியாவில் ஒரு தற்காலிக பிரதமரும், ஒரு நிரந்தர பிரதமரும் தங்கள் பதவியில் தொடர்வதால் அந்த நாட்டில் பெரும் குழப்பம் நீடிக்கிறது.
ஆஸ்திரேலியாவை ஒட்டி உள்ளது பப்புவா நியூகினியா என்ற குட்டி நாடு. இந்த நாட்டில் கடந்த 2002ம் ஆண்டு முதல் பிரதமராக இருப்பவர் மைக்கேல் சோமரே(76). இதயக் கோளாறு காரணமாக மைக்கேல் சோமரே பாதிக்கப்பட்டார்.
இதற்காக கடந்த ஏப்ரல் மாதம் சிங்கப்பூரில் மைக்கேலுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிங்கப்பூரில் மைக்கேலுக்கு சிகிச்சை பல மாதங்களாக தொடர்ந்ததால், பப்புவா நியூகினியா நாட்டின் தற்காலிக பிரதமராக பீட்டரை ஓ நீல் என்ற பிரபல தலைவரை அந்நாட்டு நாடாளுமன்றம் தேர்ந்தெடுத்தது.
இந்த நிலையில் சிங்கப்பூரில் சிகிச்சை முடிந்து கடந்த செப்டம்பர் மாதம் மைக்கேல் நாடு திரும்பினார். எனவே தற்காலிக பிரதமராக பதவி வகித்து வந்த பீட்டர் ஓ நீல்லை ராஜினாமா செய்யுமாறு கேட்டு கொண்டார். ஆனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார்.
இது குறித்து மைக்கேல், அந்நாட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மைக்கேல் சோமரே தான் பிரதமர் என்றும், பீட்டர் ஓ நீல் உடனடியாக பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கியது.
ஆனால் அதனை பொருட்படுத்தாத பீட்டர் நீல் தொடர்ந்து பிரதமர் பதவியை வகித்து வருகின்றார். பீட்டர் ஓ நீல்லுக்கு அந்நாட்டு அமைச்சரவை ஆதரவு பலமாக உள்ளது. ஆனால் அந்நாட்டு உச்சநீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்பு மைக்கேல் சோமரேக்கு சாதகமாக உள்ளது.
இதனால் தற்போது யார் உண்மையான பிரதமர் என்று தெரியாமல் நாட்டு மக்கள் குழப்பத்தில் தவிக்கின்றனர். இதுமட்டுமின்றி 2 பிரதமர்களால் நியமிக்கப்பட்ட 2 போலீஸ் கமிஷனர்களால் நாட்டில் உள்ள காவல் துறையும், 2 பிரிவுகளாக செயல்படும் நிலை உருவாகி உள்ளது.
பல ஆண்டுகள் பிரதமராக இருந்துள்ள மைக்கேல் சோமரேவின் ஆட்சியில் நாட்டில் ஊழல் அதிக அளவில் நடைபெற்றது. ஆனால் தற்போதைய பிரதமர் பீட்டர் ஓ நீல் நாட்டில் ஊழலை தடுக்க பல திட்டங்களை அறிவித்து உள்ளார். எனவே நாட்டு மக்களின் ஆதரவும், பீ்ட்டர் ஓ நீல்லுக்கு சாதகமாகவே உள்ளது.
இந்த குழப்பதால் பப்புவா நியூகினியா நாட்டின் பல பகுதிகளில் மைக்கேல் சோமாரே, பீட்டர் நீல் ஆதரவாளர்கள் மோதி கொள்கின்றனர். இந்த பிரச்சனையை தீர்க்க பக்கத்து நாடான ஆஸ்திரேலியா சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ளது.