அணைப் பிரச்சினையில் மலையாளிகளின் வன்முறையைக் கண்டித்து மதுரையில் 22ம் தேதி முழுஅடைப்பு!
மதுரை: முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் கேரளாவில் தமிழர்களுக்கு எதிராக இனவெறியுடன் கூடிய வன்முறையில் மலையாளிகள் ஈடுபடுவதைக் கண்டித்து மதுரையில் 22ம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயப்பிரகாசம் கூறுகையில்,
மதுரை உட்பட ஐந்து மாவட்ட குடிநீர், விவசாய நீராதாரமாக பெரியாறு அணை உள்ளது. அருகில் உள்ள இடுக்கி அணைக்காக, கேரள அரசு பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைத்துவிட்டது. இதனால், மதுரை உட்பட 5 மாவட்டங்கள் பாதித்துள்ளன.
மேலும், சமீபத்தில் 120 அடியாக குறைக்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி விட்டது. எனவே, பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் நிரப்பவும், தமிழக அரசின் தீர்மானத்துக்கு வலுசேர்க்கவும் மதுரையில் டிச. 22 ம் தேதி கடையடைப்பு நடத்தப்படும்.
இதில் பல்வேறு விவசாயிகள் அமைப்புகள் கலந்து கொள்கின்றன. அன்று மடீட்டிசியா அருகே உண்ணாவிரதமும் நடைபெறும். மாவட்ட அளவில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்குப்படவுள்ளது.
ஆட்டோ, கார், டாக்ஸி உள்பட பல்வேறு அமைப்புகளிடமும் ஒத்துழைப்பு கேட்டுள்ளோம் என்று கூறினார்.
5 மாவட்டங்களில் முழு கடையடைப்பு
இதேபோல, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன், முதுநிலை தலைவர் ரத்தினவேல் விடுத்துள்ள அறிக்கையில்,
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசு உடனே தலையிட்டு, கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை தடுக்க வேண்டும்.
நதிகளை தேசியமயமாக்கி, இருமாநில சம்பந்தப்பட்ட அணைகளுக்கு மத்திய தொழில்பாதுகாப்பு படையை நிறுத்த வேண்டும். தமிழர்களின் உணர்வை மத்திய, கேரள அரசுகளுக்கு தெரிவிக்கும் வகையில், மதுரை உட்பட 5 மாவட்டங்களிலும் முழுக்கடையடைப்பு, உண்ணாவிரதம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.