அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றுவதுதான் சுற்றுலாவை வளர்ப்பதா?- கருணாநிதி
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இன்றைய தினம் 100 கோடி ரூபாய்ச் செலவில் சென்னை, திருச்சியில் பொழுதுபோக்கு பூங்காக்களை சிங்கப்பூர் பாணியில் அமைக்க அரசு முடிவெடுத்திருப்பதாக ஒரு அறிவிப்பு ஏடுகளில் வெளிவந்துள்ளது.
தமிழக சுற்றுலாவினை மேம்படுத்துவதற்காக ஏழு முக்கிய பரிமாணங்களுடன் புதிய திட்டங்களை வகுக்குமாறு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருக்கிறாராம். பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு நினைவாக சுமார் 200 கோடி ரூபாய்ச் செலவில் திமுக ஆட்சியில் ஆசியாவிலேயே மிகப்பெரிய அளவுக்கு எழுப்பப்பட்டுள்ள நூலகத்தை மாற்றப் போவதாக அறிவித்தாரே, அது சுற்றுலாவை வளர்க்கின்ற செயலா?
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெற்றதின் நினைவாக அண்ணா மேம்பாலம் அருகில் தோட்டக் கலைச்சங்கம் என்ற பெயரால் சில தனியார் அனுபவித்து வந்த இடத்தைக் கைப்பற்றி, அங்கே ஒரு மிகப்பெரிய பூங்காவினை செம்மொழிப் பூங்கா என்ற பெயரில் அமைத்து அன்றாடம் நூற்றுக்கணக்கானவர்கள் கண்டு மகிழச் செய்தது சுற்றுலாவை வளர்க்கும் காரியமாக ஜெயலலிதாவுக்குத் தெரியவில்லையா?
அந்தச் செம்மொழி பூங்காவை திறந்து வைத்த என் பெயரைக்கூட மறைக்கச் செய்தது சுற்றுலாவை வளர்க்கும் பணியா? சென்னை அடையாறில் மாணவர்கள் பெரிதும் பயன்பெற வேண்டுமென்ற எண்ணத்தோடு தொல்காப்பியப் பூங்கா திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டது சுற்றுலாவை வளர்க்க வேண்டுமென்ற நோக்கத்தோடு தானே? அந்தப் பூங்கா இந்த ஆட்சியினரால் பராமரிக்கப்படுகிறதா?
கன்னியாகுமரிக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகள் காணுகின்ற வகையில் திருவள்ளுவர் சிலை, 133 அடி உயரத்தில் வானுயர நிமிர்ந்து நிற்கிறதே, அந்த இடம் சரியாக இந்த ஆட்சியில் பராமரிக்கப்படுகிறதா? கழக ஆட்சியில் சுற்றுலாத் துறையை முறையாக கவனித்ததின் காரணமாக 2010ம் ஆண்டில் சுற்றுலா பயணிகளின் வருகை 32 விழுக்காடாக உயர்ந்தது.
தமிழகத்தில் சுற்றுலா திட்டங்களுக்காக 2004ம் ஆண்டு ஒதுக்கப்பட்ட தொகை 31.29 கோடி ரூபாய். 2009-2010-ம் ஆண்டில் இந்தத் தொகை இரண்டு மடங்காக அதாவது 65.54 கோடி ரூபாயாக உயர்ந்தது கழக ஆட்சியிலேதான். எனவே சுற்றுலா திட்டம் வளர்க்கப்பட்டது திமுக ஆட்சியில் தான் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.