வட கொரியாவின் கம்யூனிஸ்ட் சர்வாதிகாரியான கிம் ஜோங் மரணம்: உடனே அதிபரானார் மகன்
இதையடுத்து அவரது மகன் கிம் ஜோங்-உன் அதிபர் பதவிக்கு வந்துள்ளதாக அந் நாட்டு அரசு அறிவித்துள்ளது.
வட கொரியா பிரிக்கப்பட்டு தனி நாடு ஆனது முதல், அந்த நாட்டை கிம் ஜோங்கின் தந்தையான கிம்-2-சுங் தான் ஆண்டார். அவர் 1994ம் ஆண்டு மரணடைந்ததையடுத்து அவரது மகன் பதவிக்கு வந்தார். இப்போது 3வது தலைமுறையைச் சேர்ந்த கிம் ஜோங்-உன் பதவிக்கு வந்துள்ளார்.
கடந்த ஆண்டு முதலே கிம் ஜோங்-உன் தலைமை பதவிக்காக தயார்படுத்தப்பட்டு வந்தார். அவருக்கு மிக முக்கிய ராணுவ, உள்துறை பதவிகள் தரப்பட்டிருந்தன. இந் நிலையில் இப்போது அவரே அதிபராகிவிட்டார்.
இது குறித்து அந் நாட்டு தொலைக்காட்சி வெளியிட்ட அறிவிப்பில், ராணுவத்தின் தயார் நிலையை அறிய தீவிரமான நேரடி பணிகளில் ஈடுபட்டிருந்த கிங் ஜோங், மன அழுத்தம் மற்றும் அதிகப்படியான உழைப்பு காரணமாக, ரயில் பயணத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார் என்று கூறப்பட்டுள்ளது.
2008ம் ஆண்டு முதலே அவர் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அவர் நடமாடவே முடியாத நிலையில் உள்ளதாக அமெரிக்கா புரளியைப் பரப்பியது. ஆனாலும் அவர் சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு பலமுறை பயணம் மேற்கொண்டு இந்த புரளியை பொய்யாக்கினார்.
இவரது மறைவையடுத்து வட கொரியா தனது படைகளை தயார் நிலைக்குக் கொண்டு வந்துள்ளது. இதையடுத்து தென் கொரியாவும் படைகளை தயார்படுத்தி வருகிறது.
வட கொரியா, தென் கொரியா இடையே நடந்த போரில் லட்சக்கணக்கானவர்கள் பலியாயினர். இப்போது இரு நாடுகளுக்கும் இடையே போர் தாற்காலிகமாகவே நிறுத்தப்பட்டுள்ளது. போர் நிறுத்தம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
தென் கொரியாவுக்கு பாதுகாப்பு அளிக்க அங்கு அமெரிக்கப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. வட கொரியாவுக்கு சீனாவும், ரஷ்யாவும் ஆயுத உதவிகள் அளித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.