முல்லைப் பெரியாறு விவகாரம்: நாளை கேரள சாலைகளில் முற்றுகைப் போராட்டம்- பழ. நெடுமாறன்
மதுரை: முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக வரும் 21ம் தேதி(நாளை) கேரளா நோக்கி செல்லும் 13 சாலைகளிலும் முற்றுகைப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை மதிக்க கேரள அரசு மறுத்துள்ளதையும், புதிய அணை கட்ட வேண்டும் என பிடிவாதமாக இருப்பதை கண்டிக்கின்றோம்.
இந்த கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் தமிழகத்திலிருந்து கேரளம் நோக்கி செல்லும் 13 சாலைகளிலும் எந்தப் பொருளையும் கொண்டுச் செல்லாமல் தடுக்கும் வகையில் முற்றுகைப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
வரும் 21ம் தேதியன்று காலை 10 மணிக்கு இந்த முற்றுகைப் போராட்டம் 13 சாலைகளிலும் நடைபெறும். கம்பம் லோயர் கேம்ப் பகுதியில் நடைபெறும் முற்றுகைப் போராட்டத்தில் நானும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் கலந்து கொள்ளுகிறோம்.
முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புக்குழுவில் அங்கம் வகிக்கும் அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களும் தோழர்களும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அறவழியில் நடத்தப்படும் இப்போராட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு அளிக்கும்படி மக்களை கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.