மலேசியாவில் நெல்லை தொழிலாளியிடம் ஓரினச்சேர்க்கை தொல்லை - மீ்ட்க கோரி புகார்
நெல்லை: மலேசியாவில் ஓட்டல் பணிக்கு சென்றுள்ள இடத்தில் அங்குள்ள தொழிலாளர்கள் பலர் ஓரினச்சேர்க்கைக்கு கட்டாயப்படுத்துவதாக நெல்லையைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் புகார் அளித்துள்ளார்.
அந்த கும்பலிடம் இருந்து அவரை மீட்க வலியுறுத்தி நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அவரது உறவினர்கள் மனு அளித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளம் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகன் ராஜன். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலேசியாவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வேலைக்கு சென்றார். அங்கு ராஜனுக்கு அதிகாலை முதல் நள்ளிரவு வரை சுமார் 18 மணி நேரம் வேலை செய்ய வாங்கிக்கொண்டு குறைந்த ஊதியமே கொடுத்ததாக கூறப்படுகிறது. வேலை முடிந்து நள்ளிரவில் படுத்து தூங்கும் போது சிலர் ஹோமோ செக்சுக்கு கட்டாயப்படுத்தியுள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்த ராஜனை அவர்கள் சித்ரவதை செய்துள்ளனர்.
நாடு திரும்ப முடிவு
இதனால் மனம் வெறுத்த ராஜன் ஓட்டல் உரிமையாளரிடம் தான் நாடு திரும்ப விரும்புவதாக கூறியுள்ளார். ஆனால் அங்குள்ளவர்கள் அவரது பாஸ்போர்ட்டை பறித்து வைத்துக் கொண்டு கொடுக்க மறுக்கிறார்களாம். இதனால் ராஜன் நாடு திரும்ப முடியாமல் அங்கு தவித்து வருகிறார்.
சமீபத்தில் தனது நிலையை செட்டிகுளத்தில் உள்ள உறவினர்களிடம் போன் மூலம் தெரிவித்து தன்னை மீட்டு இந்தியா கொண்டு வரும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது அந்த போன் எண்ணிலும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லையாம். இதனால் அவரது உறவினர்கள் எம்எல்ஏ மற்றும் கலெக்டரிடம் ராஜனை மீ்ட்டு தரும்படி புகார் கூறி உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.