முல்லைப் பெரியாறு: ஆயிரக்கணக்கானோருடன் கேரள எல்லை நோக்கி வைகோ பேரணி, மறியல்-கைது
ம.தி.மு.க. மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கேரள மாநிலத்திற்கு செல்லும் 13 மலைச்சாலைகளை முற்றுகையிடும் போராட்டம் புதன்கிழமை நடைபெறும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிவித்து இருந்தார். கட்சி சார்பின்றி இந்த போராட்டம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி இன்று போராட்டம் நடைபெற்றது. தேனி மாவட்டத்தில் குமுளி மலைச் சாலையில் லோயர்கேம்ப் பகுதியில் இன்று காலை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், முல்லைப்பெரியாறு பாசன விவசாயிகள் சங்க தலைவர் கம்பம் கே.எம்.அப்பாஸ் ஆகியோரும், கம்பம் மெட்டுவில் மல்லை சத்யா, துரை.பாலகிருஷ்ணன், பெரியார் தாசன், நாகை திருவள்ளுவன், போடி மெட்டுவில் பி.வி. கதிரவன் எம்.எல்.ஏ., முருகன்ஜி ஆகியோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தேனி நகரில் உள்ள தனது மகள் வீட்டுக்கு வந்து தங்கியிருந்தார்.
இதையடுத்து அங்கு பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும் வைகோவை முன்கூட்டியேத் தடுக்கவும் போலீஸார் திட்டமிட்டிருந்தனர். ஆனால் போலீஸார் கண்களில் மண்ணைத் தூவிய வைகோ இன்று காலை கம்பம் வந்து சேர்ந்தார்.
அங்கு கிட்டத்தட்ட 2000க்கும் மேற்பட்டோர் அலைகடலென திரண்டிருந்தனர். அனைவரும் ஊர்வலமாக கம்பம் மெட்டை நோக்கி நகரத் தொடங்கினர். ஆனால் அவர்களைப் போலீஸார் தடுத்து நிறுத்தினர். பின்னர், வைகோ, நெடுமாறன் உள்ளிட்டோரைக் கைது செய்து வேனில் ஏற்றி அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
நாஞ்சில் சம்பத் கைது
இதேபோல கேரள அரசைக் கண்டித்து கொல்லம் – திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் மதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தலைமையில் 2000 பேர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கேரள அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். பின்னர் உம்மன் சாண்டியின் உருவபொம்மையை எரித்தனர். இதனையடுத்து நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட 2ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.