மக்களின் தன்னெழுச்சிப் போராட்டங்களை ஒடுக்குவது தமிழகத்தின் நலனுக்கு எதிரானது- நெடுமாறன்
சென்னை: முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினைக் குறித்து தன்னெழுச்சியானப் போராட்டங்களில் ஈடுபட்டிருக்கும் மக்களை ஒடுக்கும் முயற்சியை மேற்கொள்வது என்பது தமிழகத்தின் நலனுக்கு எதிரானதாகும். என்று தமிழக அரசுக்கு பழ. நெடுமாறன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,
கேரளம் நோக்கிச் செல்லும் சாலைகளில் முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காகச் சென்ற என்னையும் வைகோ அவர்களையும் மற்றும் தோழர்களையும் சீலையம்பட்டி அருகே வழிமறித்து காவல்துறையினர் கைது செய்தனர்.
இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் கூடலூர் மற்றும் லோயர் கேம்ப் பகுதிகளில் அறப்போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் தாக்கிய காவல்துறையின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
பெண்கள், செய்தியாளர்கள் உள்பட பலரும் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார்கள். அத்துமீறிச் செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
பெரியாறு அணைப் பிரச்சினைக் குறித்து தன்னெழுச்சியானப் போராட்டங்களில் ஈடுபட்டிருக்கும் மக்களை ஒடுக்கும் முயற்சியை மேற்கொள்வது என்பது தமிழகத்தின் நலனுக்கு எதிரானதாகும். மக்களோடு இணைந்து தமிழக அரசும் இந்தப் போராட்டத்தில் ஒத்துழைக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் நெடுமாறன்.