திருநள்ளாறு வந்தபோது புதுவை ஆளுநரிடம் பிக்பாக்கெட் அடிக்கப்பட்டதாக பரபரப்பு
நேற்று சனிப்பெயர்ச்சி நடந்தது. இதையொட்டி திருநள்ளாறில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பல லட்சம் மக்கள் திருநள்ளாறில் குவிந்து நள தீர்த்தத்தில் நீராடி சனி பகவானை வழிபட்டனர்.
அதேபோல புதுவை துணை நிலை ஆளுநர் இக்பால் சிங்கும், திருநள்ளாறில் உள்ள ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு வந்திருந்தார். அங்குள்ள சனி பகவான் சன்னதியில் அவர் தரிசித்துக் கொண்டிருந்தபோது திடீரென ஆளுநரிடம் யாரோ பிக்பாக்கெட் அடித்து விட்டதாகவும், அவரது பர்ஸைக் காணவில்லை என்றும் செய்தி பரவியது.
இதனால் போலீஸாரும் பரபரப்படைந்தனர். ஆளுநல் உள்ள பகுதியில் மக்களும் திரளத் தொடங்கினர். ஆனால் அது வெறும் வதந்தி என்று பின்னர் தெரிய வந்தது. இதையடுத்து பக்தர்களை கலைந்து போகுமாறு கூறி போலீஸார் நிலைமையை சகஜமாக்கினர்.
வதந்தி பரப்பிய விஷமி யார் என்பது குறித்து பின்னர் போலீஸார் விசாரணை நடத்தினர். ஆனால் யாரும் சிக்கியதாகத் தெரியவில்லை.