இந்தியாவுக்கு அணு ஆயுத தொழில்நுட்பம் தந்தது பாகிஸ்தானாம்!!..'பிளேபாய் ஆராய்ச்சியாளர்' உளறல்!
வழக்கமாக பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கட்டுரைகளை நிபுணர்கள், அது தொடர்பான ஊடகங்களில் தான் எழுதுவார்கள். ஆனால், இந்த ஆராய்ச்சியாளர் தனது அணு ஆயுத கட்டுரையை உலகின் முன்னணி பலான இதழான பிளேபாய் இதழில் எழுதியுள்ளார்.
இதிலிருந்தே இந்தக் கட்டுரைக்கு அவரே 'எவ்வளவு முக்கியத்துவம்' தந்துள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது.
ஜோசுவா பொல்லாக் என்ற அந்த 'ஆராய்ச்சியாளர்' எழுதியுள்ள கட்டுரையில், இந்தியாவுக்கு பாகிஸ்தான், ஈரான், லிபியா, வட கொரியா ஆகியவை தான் அணு ஆயுதம் தயாரிப்பதற்கான குறுக்கு வழியை சொல்லிக் கொடுத்தன என்று கூறியுள்ளார்.
இதற்கு ஆதாரம் எதையும் சொல்லாத குறிப்பிடாத அவர், அணு ஆயுதம் தயாரிக்க பயன்படும் யுரேனியத்தை சுத்திகரிக்க இந்தியா பயன்படுத்தும் centrifuge கருவியும் பாகிஸ்தான் பயன்படுத்தும் கருவியும் ஒரே மாதிரியாக இருப்பதாகக் உளறிக் கொட்டியுள்ளார்.
ஆனால், இந்தியா 1974ம் ஆண்டிலேயே அணு குண்டு சோதனையை நடத்திவிட்டது என்பதும், பாகிஸ்தான் 1998ம் ஆண்டில் தான் முதல் சோதனையையே நடத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.