கிருஸ்துமஸ் புத்தாண்டு விடுமுறை : 16 எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகள்
நெல்லை: கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையை விடுமுறையை ஓட்டி பயணிகள் வசதிக்காக 16 முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பதற்கு தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை எழும்பூர், தாம்பரம் ரயில்நிலையங்களில் கிருஸ்துமஸ் புத்தாண்டு பண்டிகையை கொண்டாட தென்மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் இடம்பிடிப்பதற்காக பிளாட்பாரத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் பயணிகள் வசதிக்காக புத்தாண்டு வரை 16 முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பதற்கு தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.
பயணிகள் பயனைடைவர்
நெல்லை, முத்துநகர், நாகர்கோவில், சேரன், நீலகிரி, ஆலப்புழை உள்பட 16 ரயில்களில் தூங்கும் வசதியுடன் கூடிய 2ம் வகுப்பு பெட்டிகள் கூடுதலாக ஒன்று அல்லது 2 பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது. இதன்படி மொத்தம் 23 பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன.
இந்த கூடுதல் பெட்டிகள் இணைப்பு மூலம் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகள் பயன் பெற்றுள்ளனர் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.