லோக்பால் வரம்பிற்குள் பிரதமர்- இ.யூனியன் முஸ்லிம் லீக் வரவேற்பு
ராஜபாளையம்: லோக்பால் வரம்பிற்குள் பிரதமரை கொண்டு வருவதை இ.யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் மொய்தீன் வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராஜபாளையத்தில் இ.யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் மொய்தீன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
லோக்பால், லோக் ஆயுக்தா உள்ளிட்டவற்றை வரவேற்கிறோம். நான் எம்பியாக இருந்த போது, 153 பேர் குற்ற செயலில் சம்பந்தப்பட்டவர்களாக இருந்தனர். தற்போதும் குற்ற செயலில் ஈடுபடுபவர்கள் எம்பி ஆகும் நிலை உள்ளது. இந்த நிலையில் பிரதமரை லோக்பால் வரம்பிற்குள் கொண்டு வருவதை வரவேற்கிறோம்.
மிஸ்ரா கமிட்டி பரிந்துரைப் படி முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும். தற்போது மத்திய அரசு கூறி உள்ள இடஒதுக்கீட்டால் குழப்பம் தான் நீடிக்கின்றது. தமிழகத்தில் உள்ள மூன்றரை சதவீத இட ஒதுக்கீடை உயர்த்த வேண்டும். ஆக்கிரமிப்பில் உள்ள வக்பு வாரிய சொத்துகளை மீட்க தனி போலீஸ் படை அமைக்க வேண்டும்.
தொழில் வளர்ச்சி அடைந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. இதை சீர்குலைக்க கூடங்குளம் அணுமின் நிலையம், முல்லை பெரியாறு பிரச்னை உள்ளிட்டவை இருப்பதாக உணர்கிறேன். தமிழக மின்வெட்டு நீங்க கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது.