பிரதமருக்கு கருப்புக் கொடி காட்ட குவிந்த தொண்டர்கள்- திணறிய காரைக்குடி-1000 பேர் கைது
காரைக்குடி: காரைக்குடியில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற மனித நேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தொண்டர்கள் 1000 பேரை போலீஸார் கைது செய்தனர்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் பிரதமரின் செயல்பாடுகளைக் கண்டித்து மதிமுக, தேமுதிக, இடதுசாரிகள், மனித நேய மக்கள் கட்சி, தமுமுக உள்ளிட்ட பல கட்சிகளும் இன்று கருப்புக் கொடி போராட்டத்தை காரைக்குடியில் நடத்துவதாக அறிவித்திருந்தன.
சென்னையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை போராட்டத்திற்காக புறப்பட்டவுடனேயே மடக்கி கைது செய்து கொண்டு சென்று விட்டனர். தேமுதிகவினரையும் அவர்கள் ஆங்காங்கே மடக்கிப் பிடித்தனர்.
இந்த நிலையில் பிரதமருக்குக் கருப்புக் கொடி காட்ட காரைக்குடியில் தமுமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சியைச் சேர்ந்த 300 பேர் திரண்டிருந்தனர். தடையை மீறி கருப்புக் கொடி காட்ட முயன்ற அவர்களை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
மதிமுகவினர் பேரணி
இதேபோல மதிமுக சார்பில் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த மதிமுகவினர் இன்று காரைக்குடியில் பேரணி நடத்தினர்.
ஐந்து முல்லைப் பெரியாறு பாசன மாவட்ட செயலாளர்களுடன் மதிமுகவினர் தேவர் சிலையிலிருந்து பேரணியாக கிளம்பினர். ஆனால் அவர்களை பெரியார் சிலை அருகேயே போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கேயே அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸார் அவர்களை கைது செய்து அப்புறப்படுத்தினர்.
அதேபோல தேமுதிகவினர், விவசாய அமைப்புகள் உள்ளிட்டவற்றைச் சேர்ந்தவர்களும் போராட்டம் நடத்திக் கைதாகினர்.
பெரும் பரபரப்பு
பல்வேறும் கட்சிகளின் தொணட்ர்களும் காரைக்குடியில் குவிந்ததால், அந்த நகரமே பரபரப்பாக காணப்பட்டது. தென் மண்டல காவல்துறை ஐஜி ராஜேஷ் ஸ் தலைமையில், 4000க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புக்குக் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்தப் போராட்டத்தால் மன்மோகன் சிங் பயணத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்ற போதிலும், சென்னையிலும், காரைக்குடியிலும், தமிழகத்தின் இதர பகுதிகளிலும் இன்று பரபரப்பாக நடந்த பல்வேறு போராட்டங்கள் நிச்சயம் பிரதமரின் காதுகளுக்குச் சென்றிருக்கும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினர் தெரிவித்தனர்.