பழவேற்காடு ஏரியில் மூழ்கி பலியான 20 பேரின் உடல்களும் ஒரே இடத்தில் அடக்கம்
திருவள்ளூர்: பழவேற்காடு ஏரியில் மூழ்கி பலியான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 20 பேரின் உடல்களும் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டன.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டியன் நாடார். இவர் தனது குடும்பத்தினருடன் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் வசித்து வந்தார்.
கிறிஸ்துமஸ் தினத்தன்று தனது குடும்பத்தினர் 22 பேர் மற்றும் தனது கடையில் வேலை பார்க்கும் 20 வயது ஊழியை அனிதா ஆகியோருடன் பழவேற்காடு சென்றார். அங்கு படகு சவாரி செய்தபோது படகு எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது. இதில் ஏரியில் மூழ்கி படகில் இருந்த 22 பேர் உயிரிழந்தனர்.
சுந்தரபாண்டியனின் பேரன்களான ஜனகராஜ், பவுன்ராஜ், பால் தினகர் ஆகியோரும், படகோட்டி அன்சாரியும் மட்டும் உயிர் தப்பினர். அன்சாரியின் மனைவி நசீரா பானுவும் நீரில் மூழ்கி பலியானார். அன்சாரிக்கும், நசீராவுக்கும் திருமணமாகி 3 மாதங்களே ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சுந்தரபாண்டியன் குடும்பத்தைச் சேர்ந்த 20 பேர் ஒரே நொடியில் ஜல சமாதியானது அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. நீரில் மூழ்கி இறந்த 21 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அனிதாவின் உடல் மட்டும் இதுவரை கிடைக்கவில்லை.
மீ்ட்கப்பட்ட நசீராவின் உடல் அவரது குடும்பத்தினரிடம் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் ஒப்படைக்கப்பட்டது. அதேபோல சுந்தரபாண்டியன் குடும்பத்தாரின் 20 பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து 20 உடல்களும் கும்மிடிப்பூண்டி, கோரிமேடு பகுதியில் உள்ள சுடுகாட்டில் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டன.
முன்னதாக கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் உள்ள செயின்ட் பால் சர்ச்சில் பிரார்த்தனைக்காக உடல்கள் கொண்டு வரப்பட்டன. அங்கு அனைவரும் இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் உடல்கள் கோரிமேடு கொண்டு செல்லப்பட்டு அடககம் செய்யப்பட்டன.
இதேபோல நசீரா பானுவின் உடல் ஜாமியா பள்ளிவாசல் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நசீராவின் கணவரான படகோட்டி அன்சாரிக்கு போலீஸார் ஜாமீன் அளித்திருந்தனர். அவரும் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.