'முடிசூடா மன்னன்' கடாபி வீழ்ந்தார்!
நம்ம' கடாபியா இது என்று அத்தனை பேரும் பார்த்துப் பார்த்து அதிர்ந்து போயினர், லிபியத் தலைவர் மும்மர் கடாபியை தெருவில் இழுத்து வந்து அடித்து உதைத்து கொன்ற காட்சியைப் பார்த்தவர்கள்.
கடாபியின் நிழலைக் கூட நெருங்க முடியாமல் பெரியண்ணன் அமெரிக்காவே தடுமாறிக் கொண்டிருந்தபோது சர்வ சாதாரணாக தெரு நாயைப் போல இழுத்து வந்து கொடூரமாகக் கொலை செய்து கடாபியின் சாம்ராஜ்யத்திற்கு இறுதி ஆணி அடித்துப் பூட்டி விட்டது லிபியப் புரட்சிப் படை.
42 ஆண்டு காலமாக லிபியாவை ஆட்டிப் படைத்த சர்வாதிகாரி கடாபி. ஒவ்வொரு சர்வாதிகாரியும் ஒரு கட்டத்தில் மோசமான முடிவையே சந்திக்க நேரிடும் என்ற இயற்கை நியதிக்கேற்ப கடாபியின் கதையும் முடிந்து போனது.
சொந்த மக்களையே அடிமைப்படுத்தி, ஆட்டிப்படைத்து, அடக்கி வைத்து, கொடூர ஆட்சி புரிந்து வந்த கடாபிக்கு எதிராக, அரபு நாடுகளில் வெடித்த புரட்சியைத் தொடர்ந்து லிபிய மக்களும் கிளர்ந்தெழுந்தனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெடித்த புரட்சித் தீயில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகள் பெட்ரோலை ஊற்றி தூண்டி விட்டன. ஆயுத பலத்தையும் கூடவே கொடுத்து கடாபிக்கு எதிரான போராட்டத்தை வேகப்படுத்தினர். இதன் விளைவு படிப்படியாக ஒவ்வொரு பகுதியாக பிடித்து வந்த புரட்சிப் படையினர் இறுதியில் தலைநகர் திரிபோலியையும் பிடித்து கடாபியின் அரண்மனையையும் பிடித்தனர்.
அங்கிருந்து தப்பி ஓடிய கடாபி எங்கிருக்கிறார் என்பது மர்மமாகவே இருந்து வந்த நிலையில் அக்டோபர் 20ம் தேதி தனது சொந்த ஊரான ஷிர்தேவில் வைத்து பிடிபட்டார் கடாபி. அங்கு பதுங்கியிருந்த கடாபி, புரட்சிப் படையினரிடமிருந்து சிக்காமல் தப்பிக்க சாக்கடைக் குழாய்க்குள் பதுங்கியிருந்தபோது சிக்கி விட்டார்.
தெருவில் இழுத்து வந்த அவரை சரமாரியாக அடித்தும், கடைசியாக துப்பாக்கியால் சரமாரியாக சுட்டும் கொலை செய்தனர் புரட்சிப் படையினர். அவரது உடலை மீன்களைப் போட்டு வைத்திருக்கும் கிட்டங்கியில் தரையில் போட்டு மக்களைப் பார்க்க வைத்து 'இறுதி மரியாதை' செலுத்தியது புரட்சிப் படை.
லிபியாவின் முடி சூடா மன்னராக வாழ்ந்து வந்த கடாபியின் வாழ்க்கையில் அவர் ஆட்டிப்படைத்து வந்த மண்ணிலேயே மகா மோசமாக முடிவுக்கு வந்தது துரதிர்ஷ்டம்தான்.