கனடாவில் இந்திய மாணவர் மர்மநபரால் சுட்டுக் கொலை
டொரண்டோ: கனடாவில் பகுதிநேர ஊழியராக வேலை செய்து எம்.பி.ஏ. படித்து வந்த இந்திய மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கனடா நாட்டின் சர்ரே நகரில் வசித்து வந்தவர் அலோக் குப்தா(27). இந்தியரான இவர் கனடாவில் உள்ள வான்டெலன் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்து வந்தார். மேலும் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பகுதிநேர விற்பனையாளராக பணியாற்றி வந்தார்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கடையில் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் கடை முதலாளிகளுடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் விழா கொண்டாடும் வகையில் அலோக் மதியம் வேலைக்கு சென்றார்.
அப்போது கடைக்கு துப்பாக்கியுடன் வந்த மர்மநபர் அலோக் குப்தாவை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை மீட்ட அப்பகுதியினர் மருத்துவமனையி்ல் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். சூப்பர் மார்க்கெட்டில் கொள்ளையடிக்க வந்த போது அவர்சுடப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த அலோக்கின் வீ்ட்டார் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில் அலோக்கின் சாவுக்கு காரணமான நபரை கைது செய்து தகுந்த தண்டனை அளிக்க வேண்டும் என்று அவரது உறவினர் ஒருவர் தெரிவித்தார்.
இது குறித்து அலோக் குப்தாவின் தந்தை ஹரிஸ் பாய் குப்தா கூறியதாவது,
அலோக் குப்தாவுக்கு முன்விரோதிகள் யாரும் இல்லை. மேலும் அவர் எந்த தேவையற்ற சர்ச்சைகளிலும் சிக்குபவரும் இல்லை. கடையில் ஏற்பட்ட கொள்ளை தகராறின் இடையே அலோக் சுட்டுக் கொல்லப்பட்டு இருப்பார் என்று நினைக்கிறேன் என்றார்.