தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகள் ஸ்டிரைக்- நோயாளிகள் கடும் பாதிப்பு
தூத்துக்குடியில் பிரசவத்தின்போது கர்ப்பிணி ஒருவரின் உடல் நிலைமோசமாகி அவரும், வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்து விட்டனர். இதையடுத்து கோபம் கொண்ட அப்பெண்ணின் கணவரான ஆட்டோ டிரைவர் மகேஷ் என்பவர் தனது நண்பர்களோடு சேர்ந்து அறுவைச் சிகிச்சை செய்த டாக்டர் சேதுலட்சுமியை கிளினிக்குக்கு வந்து மிரட்டியுள்ளார். இதுகுறித்து டாக்டரின் கணவர் போலீஸில் புகார் கொடுத்தும் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த நிலையில் டாக்டர் சேதுலட்சுமி, கிளினிக்கில் வைத்து மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டாக்டர் ஒருவர், அதிலும் பெண் ஒருவர் கிளினிக்கில் வைத்து கொடூரமாகக் கொல்லப்பட்டது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
இந்த கொடூரக் கொலையைக் கண்டித்தும், போலீஸார் துரிதமாக செயல்படாததைக் கண்டித்தும் நேற்று அரசு டாக்டர்கள் திடீர் ஸ்டிரைக்கில் குதித்தனர். இதனால் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவனைகளில் புறநோயாளிகள் பிரிவு கடுமையாக பாதிக்கபப்ட்டது. சிகிச்சை பெற வந்த நோயாளிகள் பெரும் தவிப்புக்குள்ளாகினர்.
இந்த நிலையில் இன்று தனியார் மருத்துவர்களும் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் இயங்கவில்லை. அறுவைச் சிகிச்சை, பிரசவம், அவசர சிகிச்சைகளை மட்டுமே டாக்டர்கள் பார்க்கிறார்கள்.
சென்னையில் நூற்றுக்கணக்கான தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகள் மூடப்பட்டுள்ளன. மதுரை, கோவை, திருச்சி உள்பட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தனியார் மருத்துவர்கள் பணிகளைப் புறக்கணித்து விட்டு ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
டாக்டர்களின் போராட்டம் காரணமாக தனியார் மருத்துவமனைகளுக்கு வந்த நோயாளிகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.
முன்னதாக இந்திய மருத்துவ சங்க கெளரவ செயலாளர் டாக்டர் ரவிசங்கர் கூறுகையில்,
தூத்துக்குடியில் பெண் ஒருவருக்கு கருவில் குழந்தை இறந்து விட அது வயிற்றில் இருந்தால் தாய் உயிருக்கு ஆபத்து என்பதால் டாக்டர் சேதுலட்சுமி அதை அகற்ற அறுவை சிகிச்சை செய்தார். அப்போது உடல் நிலை மோசமாகி பெரிய மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு கொண்டு போகும்போது இறந்து விட்டார். இதற்கு டாக்டர் தவறு செய்திருந்தால் அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுத்திருக்கலாம். அதை விட்டு விட்டு கட்டப்பஞ்சாயத்து பேசி கடைசியில் மருத்துவமனையிலேயே டாக்டர் சேதுலட்சுமியை கொலை செய்துள்ளனர்.
இது போன்ற சம்பவம் தமிழகத்தில் நடைபெற்றது இதுவே முதல் முறை. இந்திய மருத்துவ சங்கம் இந்த கொடுஞ்செயலை வன்மையாக கண்டிக்கிறது. இது போன்று சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் அரசு தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து தனியார் மருத்துவமனைகளுக்கும், மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும்.
பொதுமக்களுக்கும் மருத்துவர்களுக்கும் சுமூக உறவு இருக்க வேண்டும். சமீப காலமாக மருத்துவர்கள் பொதுமக்கள் இடையே பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. ஆபத்தான நிலையில் இருப்பவர்களையும் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் சிகிச்சை அளிக்கிறோம். அதனையும் மீறி மருத்துவத்தையும் மீறி நோயாளி இறக்கும்போது மருத்துவரை குறை சொல்வது எப்படி நியாயமாகும்?
இதை பொதுமக்களுக்கு விளக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த இன்று அனைத்து தனியார் மருத்துமனை மருத்துவர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளோம். தமிழக மருத்துவர்கள் போராட்டத்திற்கு புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநில மருத்துவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அரசிற்கு எங்களது கோரிக்கையை அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் ஒன்று கூடி மாவட்ட கலெக்டரிடம் அளிப்போம். சென்னையில் மருத்துவத் துறை செயலாளரிடம் மனு அளிப்போம் என்றார்.