பாஜகவினரிடையே நிலவும் ஊழலை ஒழிக்க முதலில் லோக்பாலை கொண்டு வாருங்கள்- காங். நக்கல்
டெல்லி: மக்களுக்கான லோக்பால் பற்றி பேசும் பாரதீய ஜனதா கட்சியினர் முதலில் தங்களுக்குள் ஒரு லோக்பாலைக் கொண்டு வந்து பாஜகவினர் மத்தியில் நிலவும் ஊழலை முதலில் ஒழிக்கட்டும் என்று காங்கிரஸ் கட்சி நக்கலடித்துள்ளது.
மக்களவையில் நிறைவேற்றப்பட்ட லோக்பால் மசோதா மீது மாநிலங்களவையில் கடந்த மாதம் 29ம் தேதி நள்ளிரவு வரை விவாதம் நடந்தது. குழப்பமான சூழ்நிலை நிலவியதால் ஓட்டெடுப்பு நடத்தாமல் அவையானது காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
லோக்பால் மசோதா நிறைவேறாமல் போனதற்கு காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சிகள் பரஸ்பரம் குற்றம் சாட்டி வந்தன. இந்நிலையில் பாரதீய ஜனதா தலைவர்கள் நிதின் கட்கரி, அத்வானி, அருண் ஜேட்லி, சுஷ்மா சுவராஜ் ஆகியோர் அடங்கிய குழு வியாழக்கிழமையன்று குடியரசுத்தலைவரை சந்தித்து மனு அளித்துள்ளனர்.
அதில், லோக்பால் மசோதா மீது மாநிலங்களவையில் ஓட்டெடுப்பு நடத்த, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் மிக முக்கியமான லோக்பால் மசோதா மீது மாநிலங்களைவையில் ஓட்டெடுப்பு நடத்தாமல் அரசு சதி செய்தது நாடாளுமன்ற ஜனநாயகத்தை சீர்குலைத்த செயல். இது போன்ற சம்பவம் நடக்கும்போது, அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டிய குடியரசுத்தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். லோக்பால் மசோதா மீது மாநிலங்களவையில் ஓட்டெடுப்பு நடத்த, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட மத்திய அரசுக்கு குடியரசுத்தலைவர் ஆலோசனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
காங்கிரஸ் பதிலடி
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மானு சிங்வி, முதலில் பாரதீய ஜனதா கட்சிக்குள் ஒரு லோக்பாலை ஏற்படுத்தட்டும் என்று கூறியுள்ளார்.
உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியில் அமைச்சராக இருந்து ஊழல் செய்தவரான பாபுசிங் குஷ்வாஹாவை பா.ஜ.கவில் இணைத்துக்கொண்டதன் மூலம் அந்த கட்சியின் சுயரூபம் வெளிப்பட்டு விட்டதாகவும் சிங்வி தெரிவித்துள்ளார்.
இதனிடையே உத்தரபிரதேசத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் ஊழல் செய்ததாக எழுந்த புகாரின் பேரின் புதன்கிழமையன்று குஷ்வாஹாவின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.