மகரஜோதியை நாங்கள் தான் ஏற்றுவோம், தேவசம்போர்டுக்கு அந்த உரிமையில்லை: மலைவாழ் மக்கள் சங்கம் அறிவிப்பு
சபரிமலை: மகரஜோதி அன்று பொன்னம்பல மேட்டில் தீபம் ஏற்றும் உரிமை மலைவாழ் மக்களுக்குத் தான் உள்ளதே தவிர தேவசம்போர்டுக்கு இல்லை என்று மலைவாழ் மக்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சபரிமலையில் உள்ள பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தெரியும். இதைப் பார்க்க ஐயப்ப பக்தர்கள் முந்தியடிப்பார்கள். அந்த ஜோதி தானாகத் தெரிகிறதா அல்லது யாராவது ஏற்றுகிறார்களா என்ற சர்ச்சை கடந்த ஆண்டு எழுந்தது. இந்நிலையில் பொன்னம்பல மேட்டில் தெரியும் மகரஜோதி மலைவாழ் மக்களால் ஏற்றப்படுகிறது என்ற உண்மை வெளியே வந்தது.
ஆனால் தற்போது மலைவாழ் மக்கள் மகரஜோதி ஏற்ற தேவசம்போர்டு தடை விதித்துள்ளது. இதற்கு மலைவாழ் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மலைவாழ் மக்கள் இனத்தைச் சேர்ந்த மலை அரைய மகா சபா, ஐக்கிய மூல அரைய மகா சபா போன்ற மலைவாழ் மக்கள் சங்கங்களின் சார்பில் ஐக்கிய மலை அரைய மகா சபா மாநில இணைச்செயலாளர் நாராயணன் மற்றும் நிர்வாகி பரமேஸ்வரன் ஆகியோர் தொடுபுழாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
மகரஜோதி தினத்தன்று பொன்னம்பல மேட்டில் நாங்கள் தான் காலங்காலமாக தீபம் ஏற்று வருகிறோம். இனியும் ஏற்றுவோம். இதை தடுத்தால் எதிர்ப்போம். மகரஜோதி ஏற்றும் உரிமை மலை அரைய சமுதாயமான மலைவாழ் மக்களுக்கு தான் உள்ளதே தவிர தேவசம்போர்டுக்கு இல்லை. மேலும் தேவசம்போர்டு பொன்னம்பல மேட்டில் கோவில் கட்ட அனுமதிக்க மாட்டோம் என்றனர்.