கூடலூரில் பென்னிகுயிக் மணிமண்டபம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை!
ஆங்கிலேய பொறியாளரான கர்னல் ஜான் பென்னிகுயிக்தான் முல்லைப் பெரியாறு அணை உருவாக முக்கிய மூலக் காரணம். தனது சொத்து பத்துக்களையும், மனைவியின் நகைகளையும், தான் உபயோகித்த கட்டில் உள்ளிட்டவற்றையும் கூட விற்று பணம் திரட்டி, பலரிடம் நன்கொடை பெற்று இந்த மாபெரும் அணையை கட்டி முடித்தார்.
அவரை இன்றளவும் தேனி மாவட்ட மக்கள் நன்றி மறவாமல் கடவுளாக நினைத்து வழிபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பென்னிகுயிக் தமிழக மக்களுக்கு ஆற்றிய அரும் சேவையை கெளரவிக்கும் வகையில் தற்போது மணிமண்டபம் கட்ட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் இங்கு மணிமண்டபம் கட்டுவதற்குப் பதில், பென்னிகுயிக் அதிக நாட்கள் தங்கியிருந்த கூடலூர் இன்ஸ்பெக்ஷன் பங்களாவில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று கம்பம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,
தேனி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பென்னிகுயிக் மணி மண்டபம் குறித்து முதல்வரின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் லோயர் கேம்ப் மின்வாரிய ஆய்வு மாளிகை வளாகத்தில் மணிமண்டபம் கட்டினால் இடநெருக்கடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். ஆனால் கூடலூர் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையானது பென்னிகுயிக் கட்டிய கட்டிடம். அணை கட்டும்போது கட்டுமான பொருட்களை வைத்ததுடன் அதிக நாட்கள் அதில் தங்கி இருந்து பணிபுரிந்துள்ளார்.
அதிக இட வசதியுடன் கூடிய இந்த இடத்தை முதல்வர் தேர்வு செய்து மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.
இதற்கிடையே மணிமண்டபம் அமையவுள்ள லோயர் கேம்ப்பில், இன்று பொதுப்பணித்துறை பொறியாளர் குழு நேரில் ஆய்வு செய்தது.
சென்னை முதுநிலை கட்டிடக்கலை நிபுணர் ராம்பாபு தலைமையில், தேனி பொதுப்பணித்துறை கட்டிடப்பிரிவு செயற் பொறியாளர் சேனாதிபதி, உதவி செயற்பொறியாளர் பாபுஇர்வின், உத்தமபாளையம் உதவி செயற்பொறியாளர் நீராதாரம் தமிழ்செல்வன், உதவி செயற்பொறியாளர் சந்தனகுமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் கூடலூர் அருகே பென்னிகுயிக் பயன்படுத்திய பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை, லோயர் கேம்ப் மின்வாரியத்தின் ஆய்வு மாளிகையின் மேல்பகுதி ஆகிய இடங்களில் ஆய்வு செய்தனர்.
விரைவில் தங்களது ஆய்வறிக்கையை முதல்வரிடம் இவர்கள் சமர்ப்பிப்பர். அதன் பிறகு முதல்வர் ஒரு இடத்தைத் தேர்வு செய்து அறிவிப்பார். அதன் பின்னர் மணிமண்டபம் அமைக்கும் பணி தொடங்கும்.