அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பதவியிலிருந்து பழ. கருப்பையா திடீர் நீக்கம்
சசிகலாவின் நிழலுடன் தொடர்புடையவர்களைக் கூட விடவில்லை முதல்வர் ஜெயலலிதா. அவர்களை கட்சியை விட்டும், கட்சிப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வருகிறார். கடந்த சில நாட்களில் பல தலைகள் உருண்டுள்ளன. இந்த நிலையில், நேற்று பழ. கருப்பையாவிடமிருந்து பொறுப்பு பறிக்கப்பட்டது.
சிறந்த பேச்சாளர், சிந்தனையாளராக அறியபப்படுபவர் பழ. கருப்பையா. இவருக்கு சபாநாயகர் பதவி கிடைக்கும் என்றும் கூட ஆரம்பத்தில் பேச்சு அடிபட்டது. தீவிர ஜெயலலிதா விசுவாசியான பழ. கருப்பையா, கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் திமுகவினரால் கடுமையான தாக்குதலுக்குள்ளானவர்.
அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகும் கூட திருடர்களிடம் சிக்கி இவரது வீட்டில் நகைகள் பறிபோயின. துறைமுகம் தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பழ. கருப்பையா அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பதவியிலிருந்து தற்போது நீக்கப்பட்டுள்ளார்.
அதேபோல, திருநெல்வேலி புறநகர் தெற்கு மாவட்டக் கழக செயலாளர் பொறுப்பில் இருக்கும் பி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ.வும், திருநெல்வேலி புறநகர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஆர்.முருகையா பாண்டியனும் நேற்று முதல் அவரவர் வகித்துவரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் பொறுப்பில், ஆர்.முருகையா பாண்டியன் (அம்பாசமுத்திரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) நியமிக்கப்பட்டிருப்பதாக முதல்வர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பழ. கருப்பையா ஏன் நீக்கப்பட்டார் என்பது தெரியவில்லை.
ஆனால், சமீபத்தில், ஒரு வாரப் பத்திரிக்கையில் எம்.ஜி.ஆர்-திமுக தலைவர் கருணாநிதி நட்பு குறித்த கட்டுரையில், முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியன் குறித்தும், பெரியார் குறித்தும் சில கருத்துக்களை அவர் எழுதியிருந்தார். இந் நிலையில் அவர் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.