டீசல் விலையை உயர்த்த மத்திய அரசு திட்டம்: பணவீக்கம் சரிவதால் வந்த தைரியம்!
டெல்லி & ஹைதராபாத்: பண வீக்கம் கொஞ்சம் கட்டுக்குள் வந்து, விலைவாசியும் ஓரளவுக்கு கட்டுப்பட ஆரம்பித்துள்ளதையடுத்து டீசல் விலையை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பெட்ரோல் விலையை மத்திய எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுவிட்டாலும் டீசல் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்தி வருகிறது. இதன் விலையையும் சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள அனுமதிப்பது குறித்தும் மத்திய அரசு யோசித்து வருகிறது.
ஆனால், டீசல் விலை உயர்ந்தால் விலைவாசியும் உயரும் என்பதால் அந்தத் திட்டத்தை கிடப்பில் போட்டு வருகிறது. இந் நிலையில் பெட்ரோல் விலை பல முறை உயர்ந்துவிட்டது. ஆனால், விலைவாசியை கருத்தில் கொண்டும், மக்களின் கோபம், ஓட்டுக்களை மனதில் வைத்தும் டீசல் விலை கடந்த ஜூன் மாதத்துக்குப் பின் உயர்த்தப்படவில்லை.
இதனால் ஆண்டுதோறும் டீசல் விற்பனையால் மத்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு சராசரியாக ரூ. 75,000 கோடி நஷ்டம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளால் கச்சா எண்ணெய் விவகாரத்தில் சிக்கல்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்க முடியாவிட்டால், வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்படலாம். அப்படிப்பட்ட நிலையில், இறக்குமதிக்காக செலவிடப்படும் தொகையும் அதிகரிக்கலாம்.
இந் நிலையில் முன்னெச்சரிக்கையாக டீசல் விலையை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து டீசல் விலை மீதான மத்திய அரசின் கட்டுப்பாட்டையும் விலக்கிக் கொண்டு, சர்வதேச விலைக்கு ஏற்ப பெட்ரோல் மாதிரியே டீசல் விலையையும் எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்வதை அனுமதிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஆனால், 5 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் முடியும் வரை, அதாவது மார்ச் இறுதி வரை, இந்த அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பில்லை. அதன் பின்னர் அதிரடியான முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.
அதே நேரத்தில் சமையல் எரிவாயு, மண்ணெண்ணைய் ஆகியவற்றின் விலைகளை மத்திய அரசே தொடர்ந்து கட்டுப்படுத்தும் என்று தெரிகிறது.
இது குறித்து மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஜெயபால் கூறுகையில், டீசல் விலையை கொஞ்சம் உயர்த்துவது குறித்து தக்க நேரத்தில் முடிவு செய்யப்படும். விலை படிப்படியாக உயர்த்தப்படும். தற்போதைய சூழ்நிலையில் டீசல் விலையை சார்ந்தே விலைவாசி உள்ளது. இதனால் இந்த விஷயத்தில் கவனமுடன் செயல்பட வேண்டிய நிலையில் உள்ளோம்.
தற்போது பணவீக்கம் குறைந்து வருகிறது. இதனால் மாநில அரசுகள், பொருளாதார நிபுணர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி டீசல் விலையை உயர்த்துவது குறித்து தக்க நேரத்தில் முடிவெடுக்கப்படும்.
அதே நேரத்தில் டீசல் விலையை மத்திய அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிப்பதை உடனடியாகச் செய்ய முடியாது என்றார்.
இதனால் மார்ச் மாதத்துக்குப் பின் முதல் கட்டமாக டீசல் விலை உயர்த்தப்படலாம், அடுத்த சில மாதங்களில் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயிக்கும் அதிகாரம் தரப்படலாம் என்று தெரிகிறது.