அன்னா ஹஸாரே கிராம நாட்டாமை தேசியவாத காங். சார்பில் தேர்தலில் போட்டி!
ராலேகான் சித்தி: அன்னா ஹஸாரேவின் ராலேகான் சித்தி கிராமத்தின் தலைவர், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் சார்பில் ஜில்லா பரிஷத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
சரத் பவாரை ஒருவர் கன்னத்தில் அறைந்தபோது ஒரு அடிதானா என்று கேட்டு பவாரை கடுப்பேற்றியவர் அன்னா என்பது நினைவிருக்கலாம். பவாரை கடுமையாக விமர்சித்து வருபவரும் கூட. இந்த நிலையில் அன்னா கிராமத்தைச் சேர்ந்த கிராமத் தலைவர் பவார் கட்சி சார்பில் ஜில்லா பரிஷத் தேர்தலில் போட்டியிடுவது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ராலேகான் சித்தி கிராம தலைவரான ஜெய்சிங் மபாரி கூறுகையில், பிப்ரவரி 7ம் தேதி நடைபெறும் ஜில்லா பரிஷத் தேர்தலில் தங்களது கட்சி சார்பில் போட்டியிட வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் என்னை அணுகினர். இதையடுத்து நான் அன்னாவை அணுகி அவரது அனுமதியையும், ஆசியையும் கோரினேன். அவர் எந்தத் தயக்கமும் இல்லாமல் அனுமதி அளித்து ஆசிர்வதித்தார் என்றார்.
முன்பே தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக செயல்பட்டவர்தான் மபாரி. இருப்பினும் கடந்த ஒரு வருடமாக அக்கட்சியில் தீவிரமாக செயல்படவில்லை. மாறாக அன்னாவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் இணைந்து செயல்பட்டு வந்தார்.
மபாரி மேலும் கூறுகையில், உங்களுக்கு நான் பவார் கட்சி சார்பில் போட்டியிடுவதில் ஆட்சேபனை இல்லையே என்று கேட்டபோது, எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை என்று கூறினார் அன்னா என்றார்.
கடந்த ஆண்டு ராலேகான் சித்தியிலிருந்து மபாரி தலைமையில் ஒரு குழு ராகுல் காந்தியை சந்திக்க டெல்லிக்கு வந்திருந்தது. ஆனால் அவர்களைக் காக்க வைத்து கடுப்பேற்றி அனுப்பி விட்டார் ராகுல் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications