ராஜபக்சே மச்சானுக்கு அடி உதை: கச்சத்தீவு அருகே போக வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை
சென்னை: ராஜபக்சேவின் மச்சான் திருக்குமரன் நடேசன் ராமேஸ்வரம் கோவிலில் சரமாரியாக தாக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழக மீனவர்கள் இந்திய எல்லையைத் தாண்டி போக வேண்டாம் என்றும் கச்சத்தீவு அருகே போக வேண்டாம் என்றும் மீனவளத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இலங்கைக் கடற்படையினர் வெறித்தனமான தாக்குதலில் ஈடுபடலாம் என்ற முன்னெச்சரிக்கையில் மீன்வளத்துறை இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ராஜபக்சேவின் தங்கையான நிரூபமாவின் கணவர்தான் நடேசன். இவர் அடிக்கடி தமிழகத்திற்கு வருவது வழக்கம். திருச்செந்தூர், ராமேஸ்வரம் கோவில்களுக்கு அடிக்கடி வந்து சாமி கும்பிட்டுச் செல்வார். நேற்று தனது பிள்ளைகளுடன் சாமி கும்பிட ராமேஸ்வரம் கோவிலுக்கு வந்திருந்தார்.
இதையடுத்து அங்கு கூடிய மதிமுக, நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் நடேசனை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். அப்போது சரமாரியாக தாக்கப்பட்டார் நடேசன். செருப்படியும் விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீஸார் அவரை பத்திரமாக மீட்டுக் கொண்டு சென்று விட்டனர்.
இந்த நிலையில் தமிழக மீனவர்களுக்கு மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நடேசன் தாக்கப்பட்டதால், இலங்கைக் கடற்படையினர் வெறித்தனமான தாக்குதலில் ஈடுபட வாய்ப்புள்ளது என்பதால், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி சென்று மீன்பிடிக்க வேண்டாம், கச்சத்தீவு அருகே போக வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர்.