சபரிமலையில் நாளை மகர விளக்கு – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை நடைபெறுவதை ஒட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றன. ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 30ம் தேதி திறக்கப்பட்டது. மகர விளக்கு பூஜைக்கு முன்பாக நடைபெறும் பிரசித்த பெற்ற எரிமேலி பேட்டை துள்ளல் வியாழக்கிழமை நடைபெற்றது. இதை தொடர்ந்து மகர விளக்கு பூஜைக்காக ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருஆபரணம் பந்தளம் வலியக்கோயிக்கல் சாஸ்தா கோயிலில் இருந்து வெள்ளிக்கிழமை ஊர்வலமாக புறப்பட்டது. இது ஞாயிறு மாலை 6 மணிக்கு இது சன்னிதானத்தை அடையும். பின்னர் திருஆபரணம் ஐயப்ப சாமி விக்கிரத்துக்கு அணிவிக்கப்படும்.
தொடர்ந்து மாலை 6.30 மணியளவில் தீபாராதனை நடைபெறும். இந்த நேரத்தில் பொன்னம்பல மேட்டில் 3 முறை மகர ஜோதி தெரியும். முன்னதாக இன்று நள்ளிரவில் மகர சங்கிர பூஜை நடைபெறுகிறது. பின்னர் ஞாயிறு அதிகாலை 1.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். தொடர்ந்து அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், நெய்யபிஷேகம் உள்பட சிறப்பு பூஜைகள் நடக்கும்.
மகரஜோதியை தரிசிப்பதற்காக சபரி்மலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். 2 நாட்களுக்கு முன்பாகவே சபரிமலை வந்திருந்த பக்தர்கள் ஜோதியை தரிசிப்பதற்காக மலையில் பல்வேறு இடங்களில் குடில்கள் கட்டி தங்கியுள்ளனர். கடந்த மகர ஜோதியின் போது புல்மேட்டில் நெரிசல் ஏற்பட்டு 102 பக்தர்கள் பலியானார்கள். இதில் 37 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். இம்முறை மகர விளக்கு பூஜையை காண பக்தர்கள் அதிக அளவில் குவிந்து வருவதால் சபரிமலையில் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.