ஐரோப்பிய நாடுகளின் கடன் தர வரிசை குறைப்பு!: இந்தியாவையும் பாதிக்கும்
லண்டன்: கடந்த வாரம் உலகின் முன்னணி நிதி ஆலோசக அமைப்பான ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் (எஸ் அண்ட் பி), ஜெர்மனி தவிர்த்த முக்கிய நாடுகளின் கடன் தர வரிசையை (credit ratings) அதிரடியாகக் குறைத்துவிட்டது.
இதில் பிரான்சும் தப்பவில்லை. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இதே நிறுவனம் தான் அமெரிக்காவின் கடன் தர வரிசையை 'AAA' என்ற உச்ச நிலையில் இருந்து 'AA+' என்ற நிலைக்குக் குறைத்தது. அமெரிக்கா வாங்கிய கடன் அளவு 14 டிரில்லியன் டாலர்களைத் தாண்டியதால் இந்த நடவடிக்கையை எஸ் அண்ட் பி எடுத்தது. கிட்டத்தட்ட கடந்த 70 ஆண்டுகளாக ‘AAA’ என்ற அதி உயர் தரத்தில் இருந்தது அமெரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில், ஐரோப்பிய நாடுகளில் நிலவி வரும் கடும் நிதித் தட்டுப்பாடு காரணமாக, அந்த நாடுகளின் கடன் தர வரிசையையும் எஸ் அண்ட் பி குறைத்துள்ளது.
இதில் ஜெர்மனி மட்டும் தப்பிவிட்டது. ஆனால், பிரான்சின் கடன் தர வரிசை ‘AAA’ என்ற நிலையிலிருந்து ‘AA’ குறைக்கப்பட்டுவிட்டது. இத்தாலி, ஸ்பெயினின் தர வரிசை ‘A’ என்ற நிலைக்குக் குறைக்கப்பட்டுவிட்டது.
போர்சுகல் நாட்டின் பொருளாதாரத்தை கிட்டத்தட்ட ஒன்றுமே இல்லை என்று கூறியுள்ள எஸ் அண்ட் பி, ஆஸ்த்ரியா, சைப்ரஸ், மால்டா, ஸ்லோவாக்கியா ஆகியவற்றின் தர வரிசையையும் அதிரடியாகக் குறைத்துவிட்டது.
அதாவது, இந்த நாடுகளின் கடன் அளவு அவர்களால் திருப்பிச் செலுத்தும் அளவைத் தாண்டிவிட்டது, கடன் பிரச்சனையிலிருந்து வெளியே வர இந்த நாடுகள் போதிய அளவு நடவடிக்கைகளை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றன என்று கூறியுள்ளது எஸ் அண்ட் பி.
யூரோ கரன்சியை பயன்படுத்தும் பாதிக்கும் மேற்பட்ட நாடுகளின் கடன் தர வரிசை குறைக்கப்பட்டுவிட்டதால், யூரோவின் மதிப்பும் ஆட்டம் கண்டுள்ளது. ஓராண்டில் இல்லாத அளவுக்கு அதன் மதிப்பு கடந்த வெள்ளிக்கிழமை சரிந்தது.
இதனால், இந்த நாடுகளின் அரசுப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், அதை வாபஸ் பெற ஆரம்பித்தாலோ, தங்களது முதலீட்டுக்கு அதிக வட்டி வேண்டும் என கேட்க ஆரம்பித்தாலோ நிலைமை இன்னும் மோசமாகும்.
பிரச்சனை ஐரோப்பாவுக்குத் தானே என்று நாம் நினைத்தால், தவறு செய்கிறோம் என்று அர்த்தம்.
இந்த தர இறக்கம் காரணமாக, ஐரோப்பிய நிறுவனங்களில் முதலீடு செய்வோர் எண்ணிக்கை சரிவதோடு, ஐரோப்பிய நிறுவனங்களின் விரிவாக்கத் திட்டங்களும் முடங்கும். இதனால் ஐரோப்பிய நிறுவனங்களை சார்ந்துள்ள இந்திய சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு புதிய ஆர்டர்கள் குறையும்.
ஐரோப்பிய வங்கிகள் கடன் தருவதையும் குறைக்கும் என்பதால், அந்நாட்டு மக்களிடையே பணப் புழக்கம் குறையும். மேலும் ஐரோப்பாவில் வேலையில்லா திண்டாட்டமும் அதிகரிக்கும் என்பதால், அந்த நாடுகளுக்கான இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் ஏற்றுமதியும் பாதிக்கப்படலாம்.
ஐரோப்பாவுக்கான ஏற்றுமதிகள் குறைந்துவிட்டதால் ஜப்பான், தென் கொரியா, சீனா ஆகிய நாடுகள் ஏற்கனவே பாதிப்பை சந்திக்க ஆரம்பித்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.