திருமலையில் தங்கும் விடுதிகளின் கட்டணத்தை உயர்த்த தேவஸ்தானம் முடிவு
திருப்பதி: திருமலையில் உள்ள தங்கும் விடுதிகளின் கட்டணத்தை உயர்த்த, திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
திருமலை கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு, சூராபுரம் தோட்டம் பகுதியில் சிறப்பு நிலை தங்கும் விடுதிகள் உள்ளன. இவ்விடுதிகளில் தங்குவதற்கு தற்போது வசூலிக்கப்படும் கட்டணத்தை அதிகரிக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் சில கூறியதாவது,
திருமலை சூராபுரம் தோட்டம் பகுதியில் 60 சிறப்பு நிலை தங்கும் விடுதிகள் உள்ளன. பாஞ்ச ஜன்யம் வளாகத்தில் 386 அறைகள் உள்ளன. இங்கு தங்குவதற்கு அறை ஒன்றிற்கு தற்போது ரூ.300 கட்டணமும், வைப்பு தொகையாக ரூ.350 வசூலிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் தற்போது புதிதாக கட்டப்பட்டுள்ள கவுஸ்துபம் வளாக அறைகளுக்கு ரூ.500 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகின்றது. சிறப்பான வசதிகள் கிடைப்பதால், தேவஸ்தான ஊழியர்கள், அரசு ஊழியர்கள், முக்கிய நபர்கள் உள்ளிட்டோர் இங்கு அதிகளவில் தங்குகின்றனர்.
ஆனால் மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளின் கட்டணங்கள் உயர்ந்துள்ளதால், விடுதிகளின் கட்டணம் உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இது குறித்து தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
அதன்படி சிறப்பு நிலை விடுதிகளின் கட்டணத்தை ரூ.750 எனவும், வைப்புத் தொகையை ரூ.750 எனவும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பாஞ்சஜன்யம் வளாக அறைகளின் கட்டணம் ரூ.500 எனவும், வைப்புத் தொகை ரூ.500 எனவும் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட இரு விடுதிகளின் கட்டணங்களை உயர்த்துவதன் மூலம், திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்திற்கு தினமும் ரூ.1 லட்சம் வரை கூடுதல் வருமானம் கிடைக்கும் என்றனர்.