கேஸ் சப்ளை பாதிப்பிலிருந்து தப்பினர் மக்கள்- டேங்கர் லாரி ஸ்டிரைக் வாபஸ்
எல்பிஜி டேங்கர் லாரிகள் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து கேஸை சிலிண்டரில் நிரப்பும் மையத்திற்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்காக 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த ஒப்பந்தம் போடப்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 31-ந் தேதியுடன் பழைய ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் புதிய ஒப்பந்தத்திற்காக டெண்டர் கோரப்பட்டது. இதில் 4,200 கேஸ் டேங்கர் லாரிகள் கலந்து கொண்டன.
ஆனால் இதுவரை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் டேங்கர் லாரிகளுக்கு புதிய வாடகை ஒப்பந்தத்தினை அமல்படுத்தவில்லை. மேலும் கூடுதலாக பங்கேற்ற 600 டேங்கர் லாரிகளுக்கு பணி உத்தரவும் வழங்காமல் காலதாமதம் செய்து வருகிறது.
இதையடுத்து, புதிய வாடகை ஒப்பந்தத்தினை உடனடியாக நிறைவேற்ற கோரியும், கூடுதலாக பங்கேற்று உள்ள லாரிகளுக்கு வேலை வழங்க கோரியும், ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்ட காலத்திற்கு உரிய நிலுவை தொகையை வழங்க கோரியும் தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் குதித்தனர்.
இந்தப் போராட்டம் இன்று 7வது நாளாக நீடித்தது. இதனால் சுத்திகரிப்பு நிலையங்களிலிரு்து பாட்லிங் பிளான்ட்டுகள் எனப்படும் கேஸ் நிரப்பும் மையங்களுக்கு கேஸ் அனுப்பும் பணி பாதிக்கப்பட்டது. இன்று மாலை வரை 60 ஆயிரம் டன் கேஸ் ஏற்றி செல்லும் பணி பாதிக்கப்பட்டது. இதேபோல் லாரி உரிமையாளர்களுக்கும் நாள் ஒன்றுக்கு ரூ. இரண்டரை கோடி வீதம் ரூ.15 கோடி இழப்பு ஏற்பட்டது.
கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் சில பாட்லிங் பிளாண்டுகளில் கேஸ் இருப்பு தீர்ந்து விட்டது. தமிழகத்திலும் சில பிளாண்டுகளில் கேஸ் தீரும் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் நேற்று முன்தினம் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், பொதுமக்களின் அத்தியாவசிய பொருட்களில் ஒன்றான சமையல் கேஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதால், வேலைநிறுத்த போராட்டத்தை விலக்கி கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
அதற்கு டேங்கர் லாரி உரிமையாளர்கள் சார்பில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினால், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண தயாராக இருக்கிறோம். ஆனால் இதுவரை நிறுவன அதிகாரிகள் எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை. எனவே எங்களது போராட்டம் தொடரும் என்று கூறி விட்டனர்.
இதையடுத்து தமிழக பொது வினியோகம் மற்றும் பாதுகாப்பு துறை செயலாளர் நிர்மலா தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்களையும், ஆயில் நிறுவன அதிகாரிகளையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.
இந்த நிலையில், நாமக்கல்லில் நேற்று மாலை தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் அதன் தலைவர் பொன்னம்பலம் தலைமையில் நடந்தது. இதில் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் நல்லதம்பி, எல்.பி.ஜி.டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் கார்த்திக் மற்றும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் இன்று சென்னையில்,பொது வினியோகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் அலுவலகத்தில் நடைபெறும் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி இன்று மாலை பேச்சுவார்த்தை நடந்தது. அதில் உடன்பாடு ஏற்பட்டதால் ஸ்டிரைக்கை வாபஸ் பெறுவதாக லாரி உரிமையாளர்கள் அறிவித்தனர். இதன் மூலம் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.