சோனியா இத்தாலியிலிருந்து வரலாம், நான் ம.பியிலிருந்து உ.பிக்கு வரக் கூடாதா?-உமா பாரதி
லக்னோ: சோனியா காந்தி இத்தாலியிலிருந்து வந்து உ.பி.யில் போட்டியிடலாம் என்றால் நான் மத்தியப் பிரதேசத்திலிருந்து உ.பி.க்கு வந்து போட்டியிடக் கூடாதா என்று கேட்டுள்ளார் உ.பி. மாநில பாஜக பொறுப்பாளரான உமா பாரதி.
உ.பி. தேர்தல் பிரசாரத்தில் உமா பாரதி தலைமையில் பாஜகவினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். உமா பாரதி ம.பியைச் சேர்ந்தவர். தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய உமா பாரதி, ராகுல் காந்தியின் குருவாக செயல்பட்டு வருபவர் திக்விஜய் சிங். இவரை ம.பியில் மண்ணைக் கவ்வ வைத்தோம். அதேபோல உ.பியிலும் காங்கிரஸை மண்ணைக் கவ்வ வைப்போம் என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த ராகுல் காந்தி, வெளியிலிருந்து வந்தவர் உ.பியில் போட்டியிடுகிறார் என்று உமா பாரதியை மறைமுகமாக கிண்டலடித்திருந்தார்.
இதற்கு உமா பாரதியும் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அடுத்தவரை வெளியாள் என்று கூறுவதற்கு முன் தனது தாயும் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி எங்கிருந்து வந்தவர் என்பதை ராகுல் காந்தி நினைவில் கொள்ள வேண்டும். இத்தாலியில் இருந்து வந்த சோனியாவை இந்தியர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். நான் அண்டை மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் இருந்துதானே வந்திருக்கிறேன்.
இத்தாலியிலிருந்து வந்த சோனியா காந்தி உ.பியில் போட்டியிடலாம். ம.பியிலிருந்து வந்த நான் உ.பியில் போட்டியிடக் கூடாதா என்று கேட்டுள்ளார் உமாபாரதி.
முன்னதாக ராகுல் காந்தி தனது தேர்தல் பிரசாரத்தின்போது உமா பாரதியை மிகக் கடுமையாக சாடினார். அவர் பேசுகையில், பந்தல்கண்ட் பிரதேசம் வறட்சியில் சிக்கித் தவித்தபோது, மக்கள் சாகும்போது எங்கே போயிருந்தார் இந்த உமாபாரதி. இங்கு அவர் வந்தாரா.மக்களைப் பார்த்தாரா, விவசாயிகளைப் பார்த்தாரா.
டெல்லி பக்கம்தானே அவர் சுற்றிக் கொண்டிருந்தார். இப்போது தேர்தல் வருகிறது என்றவுடன் இங்கு வந்துள்ளார். இதற்கு முன்பு எப்போதாவது அவர் இந்தப் பக்கம் வந்திருந்தாரா.
மத்தியப் பிரதேசத்திலிருந்து அவரை மக்கள் தூக்கி எறிந்து விட்டனர்.அதனால்தான் வேறு வழியில்லாமல் இங்கு வந்து போட்டியிடுகிறார் உமா பாரதி என்றார் காட்டமாக.
உ.பி. சட்டசபைத் தேர்தலில் உமா பாரதி, பந்தல்கண்ட் பகுதிக்குட்பட்ட சர்ககாரி என்ற தொகுதியில் போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.