பூசாரியே போயாச்சு, புல்லட் மட்டும் ஏன் சீறுது??-பெரம்பலூரைக் கலக்கும் இளவரசியின் அண்ணன்!
சென்னை: சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த அத்தனை பேரும் கூண்டோடு துரத்தப்பட்டு விட்ட நிலையில் இளவரசியை மட்டும் முதல்வர் ஜெயலலிதா இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டு வைத்துள்ளார். அதேபோல இளவரசியின் அண்ணன் கண்னதாசனும் எந்த நடவடிக்கையிலும் சிக்காமல் கமுக்கமாக விடப்பட்டுள்ளார். அவரும் தொடர்ந்து தனது ஆதிக்கத்தை சற்றும் குறைத்துக் கொள்ளாமல் ஆடி வருகிறாராம். இது ஏன் என்று புரியாமல் ரத்தத்தின் ரத்தங்கள் குழப்பமாக வலம் வருகின்றனர்.
சசிகலா குடும்பத்தார் கிட்டத்தட்ட அத்தனை பேருமே அதிமுகவிலிருந்தும், போயஸ் தோட்டத்திலிருந்தும் துரத்தப்பட்டு விட்டனர். சசிகலாவின் அண்ணியான இளவரசி மட்டும் நடவடிக்கையிலிருந்து தப்பியுள்ளார். அதேசமயம், அவரது சம்பந்தி, மருமகன் என யாருமே நடவடிக்கையிலிருந்து தப்பவில்லை. அத்தனை பேரும் விரட்டப்பட்டு விட்டனர்.
இந்த நிலையில் சசி வட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தொடர்ந்து ஏகபோகமாக ஆட்டம் போட்டு வருகிறார். அவர் வேறு யாருமல்ல, இளவரசியின் சொந்த அண்ணனான கண்ணதாசன் தான். இவர் பெரம்பலூர் மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரியாக அரசுப் பணியில் உள்ளார். 2009ம் ஆண்டு முதல் பெரம்பலூர் மாவட்ட பி.ஆர்.ஓவாக இவர் இருந்து வருகிறார்.
இவர் பெரம்பலூருக்கு வந்தபோது திமுக ஆட்சியில் இருந்தது. இதனால் கமுக்கமாக இருந்து வந்தார். பின்னர் அதிமுக ஆட்சிக்கு மாறியதும், செமத்தியாக ஆட ஆரம்பித்தாராம். டிரான்ஸ்பர், நியமனம் என எதுவாக இருந்தாலும் அதில் மூக்கை நுழைத்து விடுவார். ஆட்சியில் மட்டுமல்லாமல் கட்சி வட்டாரத்திலும் கண்ணதாசன் அட்டகாசம் அதிகமாம்.
ஆனால் தற்போது சசிகலா குடும்பத்தினர் விரட்டப்பட்டு விட்ட பின்னரும் கூட இவரது ஆட்டத்தின் வேகம் சற்றும் குறையவில்லை என்கிறார்கள். இதுதான் அதிமுகவினரையும், அதிகாரிகளையும் எரிச்சல்படுத்தி வருகிறதாம்.
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது இவர் கை காட்டிய தமிழ்ச்செல்வன் பெரம்பலூரிலும், இந்திரா காந்தி துறையூரிலும், இளவழகன் ஜெயங்கொண்டத்திலும் போட்டியிட சீட் தரப்பட்டதாம். இவர்களில் தமிழ்ச்செல்வனை அமைச்சராக்கி விட துடித்தாராம் கண்ணதாசன். ஆனால் இளவரசியால் அது முடியவில்லை என்கிறார்கள்.
இதேபோல உள்ளாட்சித் தேர்தலிலும் கூட பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் தனது கைத்தடிகள் பலரையும் சீட் வாங்கி்க கொடுத்து வெற்றி பெறவும் வைத்து இரு மாவட்டங்களிலும் தனது ஆதரவு பலத்தை அபரிமிதமாக பெருக்கி வைத்துள்ளாராம் கண்ணதாசன்.
இதெல்லாம் ஜெயலலிதாவும், சசிகலாவும் நட்புடன் இருந்தபோது நடந்தவை என்றாலும் கூட இப்போது சசிகலா குடும்பத்தினர் மொத்தமாக போய் விட்ட போதும கூட கண்ணதாசனின் மவுசும், பவுசும் குறையவில்லையாம். தொடர்ந்து அதிகாரிகளை இவர் கட்டுப்படுத்தி ஏவி வருகிறாராம். உத்தரவுகளைப் போடுகிறாராம். இவரது உத்தரவு இல்லாமல் இப்போதும் எதுவும் நடப்பதில்லையாம். டெண்டர் விடுவது, இடமாற்றம், நியமனங்கள், என ஏகப்பட்ட வேலைகளில் கண்ணதாசன் தலையீடு உள்ளதாம்.
பூசாரியே போய் விட்டார், புல்லட் மட்டும் ஏன் இப்படி சீறி வருகிறது என்று புரியாமல் ரத்தத்தின் ரத்தங்களும், அரசு அதிகாரிகளும் பெரும் குழப்பத்தில் உள்ளனராம்.
ஒருவேளை அம்மா தரப்புடன் இளவரசி நெருக்கமாக இருப்பதால் அதைப் பயன்படுத்தி கண்ணதாசன் ஆடி வருகிறாரோ என்று கருதப்படுகிறது. அதேசமயம், இதை அம்மாவின் காதுகளுக்குக் கொண்டு போய் கண்ணதாசனை கட்டி வைக்க நடவடிக்கை எடுக்க அதிமுகவினர் முயற்சி மேற்கொண்டு வருகிறார்களாம். ஆனால் சசிகலா தரப்பினரை தொடர்ந்து வேவு பார்த்து வரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, கண்ணதாசனின் ஆட்டம் மட்டும் தெரியாமலா இருக்கும். இருந்தாலும் அவர் அமைதியாக இருப்பதைப் பார்த்தால் கண்ணதாசனுக்கு வேறு மாதிரியான ட்ரீட்மென்ட் காத்திருக்கலாம் என்றும் பேசிக் கொள்கிறார்கள்.
என்னதான் பேச்சு அடிபட்டாலும் கண்ணதாசனின் ஆட்டம் மட்டும் சற்றும் அடங்காமல் அலையடித்துக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை.