முன்னாள் எம்எல்ஏ ரங்கநாதன் குண்டர் சட்டத்தில் கைதானது செல்லாது- உயர்நீதிமன்றம்
சென்னை: திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
சென்னை வில்லிவாக்கம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.ரங்கநாதன்(61). இவர் மீது அம்பத்தூரை சேர்ந்த கிருபைநாயகம் என்பவரின் நிலத்தை அபகரித்ததாக புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் நொளம்பூர் காவல் நிலைய போலீசார், வழக்குப் பதிவு செய்து ரங்கநாதன் மற்றும் அவரது உதவியாளர் கெளரிசங்கர் உள்ளிட்டோர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்குமாறு சென்னை போலீஸ் கமிஷனர் கடந்த ஆண்டு ஆகஸ்டு 8ம் தேதி உத்தரவிட்டார்.
இதனையடுத்து ரங்கநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் புகார் தாரரின் சிவில் வழக்கு நிலுவையில் உள்ளதை கருத்தில் கொள்ளாமல், எங்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே சட்டவிரோதமான முறையி்ல சிறையில் அடைக்கப்பட்டுள்ள எங்கள் மீது போலீஸ் கமிஷனர் பிறப்பித்துள்ள குண்டர் சட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
ரங்கநாதனின் மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.ஜோதிமணி, டி.துரைசாமி உள்ளிட்டோர் நிலப்பறிப்பு புகாரில் கைது செய்யப்பட்டவரை தகுந்த காரணங்கள் இல்லாமல் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர். போலீஸ் கமிஷனர் பிறப்பித்த குண்டர் சட்ட உத்தரவு சட்ட விரோதமானது. எனவே இந்த உத்தரவை ரத்து செய்யப்படுகின்றது. ரங்கநாதனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தது செல்லாது என்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.
இவ்வழக்கில் மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் என்.ஆர்.இளங்கோ, சண்முகசுந்தரம், சரவணன் உள்ளிட்டோர் ஆஜராகினர்.