இலங்கையிலிருந்து 'ரிட்டர்ன்': எஸ்.எம்.கிருஷ்ணா நாளை கரூர் வருகை!
கரூர்: கரூர் உள்ள சித்தர் சதாசிவ பிரமேந்திராள் ஜீவ சமாதி கோவிலுக்கு, நாளை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா வருகை தர உள்ளார்.
கரூர் அருகே உள்ள புகழ் பெற்ற சித்தர் சதாசிவ பிரமேந்திராள் ஜீவ சமாதி கோயில் உள்ளது. இக்கோவிலுக்கு பல ஆன்மீக பெரியோர்களும், பிரபல அரசியல் தலைவர்களும் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
இந்த நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நாளை (21.1.2012) காலை 9 மணி அளவில் வருகின்றார். அவர் கோவிலில் உள்ள சித்தர் சதாசிவ பிரமேந்திராள் ஜீவ சமாதி, காசி விஸ்வநாதர், சூரியன், சந்திரன், முருகன், பைரவர் உள்ளிட்ட சாமிகளை தரிசனம் செய்ய உள்ளார். இதனால் கரூர் மாவட்டம் முழுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணாவின் வருகையை முன்னிட்டு திருச்சி போலீஸ் ஐ.ஜி.அலெக்சாண்டர் மோகன் இன்று காலை கரூர் வந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
ஈழ தமிழர் விவகாரத்தில் மத்திய காங்கிரஸ் அரசு செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை என்று தமிழ் உணர்வாளர்களும், பல்வேறு கட்சிகளு்ம், அமைப்புகளும் குற்றம் சாட்டி வருகின்றன. இலங்கை சென்ற எஸ்.எம்.கிருஷ்ணா, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்துமாறு உரத்த குரலில் இலங்கையிடம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்ற அதிருப்தியும் நிலவுகிறது. எனவே எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்த கூடும் என்ற தகவல் வெளியாகி உள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
எஸ்.எம்.கிருஷ்ணா மீதான சுரங்க ஊழல் விசாரணைக்கு தடையில்லை
இதற்கிடையே, எஸ்.எம்.கிருஷ்ணா மீது கர்நாடக லோக் ஆயுக்தா கோர்ட்டில் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று மறுத்து விட்டது. இதுதொடர்பாக கிருஷ்ணா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கோரிக்கையை அது நிராகரித்து விட்டது.
சட்டவிரோத சுரங்க ஊழல் வழக்கில் கிருஷ்ணாவின் பெயரை சமீபத்தில் லோக் ஆயுக்தா சேர்த்தது. இதுதொடர்பாக அவர் மீது முதல் தகவல் அறிக்கையும் பதிவானது. இதையடுத்து இந்த வழக்கில் தான் சேர்க்கப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தை அணுகியிருந்தார் கிருஷ்ணா.
ஆனால் இந்த மனுவை இன்று தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், கிருஷ்ணா மீதான விசாரணை தொடரும் என்று அறிவித்தது.
கர்நாடக முதல்வராக 1999 முதல் 2004 வரை பொறுப்பி்ல் இருந்த எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் முன்னாள் முதல்வர்கள் தரம்சிங், குமாரசாமி ஆகியோர் தங்களது பதவியைப் பயன்படுத்தி முறைகேடான வகையில் சட்டவிரோத சுரங்கத் தொழிலுக்கு பல்வேறு உரிமங்களை வழங்கியுள்ளனர். எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.ஜே.ஆப்ரகாம் என்பவர் புகார் கொடுத்தார்.
இதை விசாரித்த லோக் ஆயுக்தா கோர்ட், எஸ்.எம்.கிருஷ்ணா உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்தது என்பது நினைவிருக்கலாம்.