இலங்கையில் இந்திய திட்டங்கள்-நல்ல முன்னேற்றம்-எஸ்.எம்.கிருஷ்ணா திருப்தி!
கொழும்பு: பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைக்காக அறிவித்த அனைத்துத் திட்டங்களும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இது எனக்கு பூரண திருப்தியை அளித்துள்ளது என்று அங்கு நான்கு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விட்டு தாயகம் திரும்பியுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.
நான்கு நாட்கள் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்தார் கிருஷ்ணா. அங்கு தமிழர் பகுதிகளில் இந்திய அரசின் சார்பில் கட்டப்பட்டுள்ள வீடுகளை பயனாளிகளுக்கு வழங்குவதைத் தொடங்கி வைத்தார். இந்திய உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள ரயில் பாதையைத் திறந்து வைத்தார். இலவச சைக்கிள்கள் உள்ளிட்ட பலவற்றை வழங்கினார்.
இதையெல்லாம் முடித்து விட்டு எஸ்.எம்.கிருஷ்ணா தாயகம் திரும்பினார். திரும்பும் வழியில் செய்தியாளர்களுடன் விமானத்தில் அவர் பேசுகையில்,
இலங்கையில் ஆட்சி அதிகாரத்தில் தமிழர்களுக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் அதிகாரப் பகிர்வு அளிக்க வேண்டியது அவசியம். இதற்காக 13-வது அரசியல் சாசனப் பிரிவை வெளிப்படையான வகையில் அமல்படுத்த வேண்டும்.
ராஜபக்சே உள்ளிட்டோருடன் நடத்திய பேச்சுகள் திருப்தியளிக்கின்றன. தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்க வகை செய்யும் இலங்கை அரசியல் சட்டத்தின் 13-வது பிரிவு அமல்படுத்தப்பட வேண்டும்.
இனப் பிரச்னைக்குத் அரசியல் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் குறித்து சில தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சந்தேகம் எழுப்பினர். அதனால் இது தொடர்பாக ராஜபக்சேவுடன் பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதிகாரப் பகிர்வு அளிக்கும் வகையில் 13-வது அரசியல் சாசன சட்டத் திருத்தத்தை அமல்படுத்துவோம் என்று ராஜபக்சே என்னிடம் உறுதியளித்தார்.
இந்தியா சார்பில் இலங்கையில் செய்யப்பட்டுவரும் வளர்ச்சிப் பணிகளில் திருப்தியளிக்கும் வகையில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கின்றன. ஒட்டுமொத்தமாகக் கூறுவதென்றால், பிரதமர் மன்மோகன் சிங்கால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்கிற திருப்தி எனக்கு ஏற்பட்டிருக்கிறது என்றார் கிருஷ்ணா.
தமிழக மீனவர்கள் மீ்து தொடர்ந்து இலங்கை கடற்படை கும்பல் தாக்குதல் நடத்தி வருவதைத் தடுக்க உறுதியான நடவடிக்கை எதையும் இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தியதா என்று கிருஷ்ணாவிடம் யாரும் கேட்கவும் இல்லை, அவரு்ம் அதுகுறித்து விரிவாகப் பேசவில்லை.