ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரை நிகழ்த்துகிறார் ருஷ்டி
சாத்தானிக் வேர்சஸ் என்ற பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நூலை எழுதியவர் இந்தியாவைப் பூர்வீமாகக் கொண்டு தற்போது இங்கிலாந்தில் வசித்து வரும் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. இந்த நூலைத் தடை செய்த முன்னாள் ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா கொமேனி, ருஷ்டிக்கு மரண தண்டனை விதித்து அறிவித்தார். இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் வாழ்ந்து வருகிறார் ருஷ்டி.
அவரது நூல் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் ருஷ்டியும் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. ராஜஸ்தான் அரசும், ருஷ்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக கூறியது. இதையடுத்து ருஷ்டி தனது பயணத்தை ரத்து செய்தார்.
இந்தநிலையில் ராஜஸ்தான் அரசு வேண்டுமென்றே பொய்யான தகவலைக் கூறி தான் ஜெய்ப்பூர் வர விடாமல் தடுத்து சதி செய்து விட்டதாக ருஷ்டி குற்றம் சாட்டினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் ராஜஸ்தான் அரசு இதை மறுத்துள்ளது.
இந்த நிலையில் ருஷ்டி தற்போது வீடியோ கான்பரன்ஸ் மூலம் நாளை ஜெய்ப்பூர் விழாவில் உரை நிகழ்த்தவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை மாலை 3.45 மணிக்கு இந்த உரை இடம் பெறுகிறது. அதற்கு முன்பாக இதற்கான அனுமதியை ஜெய்ப்பூர் இலக்கிய விழா ஏற்பாட்டாளர்கள் பெற வேண்டியுள்ளது. அனுமதி கிடைத்தால்தான் ருஷ்டியின் பேச்சு இடம் பெற முடியும்.
ருஷ்டி என்ன பேசப் போகிறார், சாத்தானிக் வேர்சஸ் புத்தகத்திலிருந்து எதையாவது அவர் வாசிப்பாரா என்பது குறித்து தீவிரமாக ஆலோசித்த பின்னரே வீடியோ பேச்சுக்கு அனுமதி தர ராஜஸ்தான் அரசும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. குறிப்பாக சாத்தானிக் வேர்சஸ் நூலிலிருந்து ருஷ்டி எதையும் வாசிக்கக் கூடாது, குறிப்பிடக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே சாத்தானிக் வேர்சஸ் நூலிலிருந்து சில பகுதிகளை வாசித்ததற்காக அமிதவா குமார், ஹரி குன்ஸ்ரு, ஜீத் தாயில் மற்றும் ருசிர் ஜோஷி ஆகிய நான்கு எழுத்தாளர்கள் வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது நினைவிருக்கலாம். இந்தப் பின்னணியில்தான் ருஷ்டி வீடியோ உரை நிகழ்த்தப் போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ருஷ்டியின் நூல் 1988ம் ஆண்டு தடை செய்யப்பட்டது. முஸ்லீம்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி இந்த தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடை தற்போது இந்தியா, எகிப்து, பாகிஸ்தான், ஈரான், மலேசியா, லைபீரியா, பாபுவா நியூ கினியா உள்ளிட்ட நாடுகளில் இன்னமும் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.