இந்தோனேசிய ஆற்றில் பயங்கரம்-தந்தையின் கண் முன்னே மகளை விழுங்கிய முதலை
ஜகர்த்தா: இந்தோனேசியாவில் 10 வயது சிறுமியை அவளது தந்தையின் கண் முன்னே முதலை கொன்று விழுங்கியது.
10 வயது சிறுமி ஜுரைதா தனது தந்தை மற்றும் சகோதரருடன் இந்தோனேசியாவின் கிழக்கு நுசாடெங்கரா மாகாணத்தில் உள்ள ஆற்றங்கரையோரம் கடலாமைகள் பிடித்துக் கொண்டிருந்தாள். அப்போது ஆற்றில் அவள் இறங்கியபோது முதலை ஒன்று அவளை தண்ணீருக்குள் இழுத்துச் சென்றது. அவரது அலறல் சத்தம் கேட்டு அவளது தந்தை அங்கு ஓடி வந்தார்.
ஆனால் அதற்குள் அந்த முதலை சிறுமியைக் கடித்துக் கொன்று விழுங்கியது. தனது மகள் தன் கண் முன்பே கொல்லப்பட்டதைப் பார்த்த தந்தை அதிர்ச்சியில் உறைந்தார். சிறுமியின் உடலை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனால் சிறுமியின் ஆடையும், ரிப்பனும் தான் கிடைத்ததே தவிர உடல் கிடைக்கவில்லை. இந்த தகவலை ஜகர்த்தா போஸ்டின் அதிகாரி விக்டர் மாடோ வாடன் தெரிவித்தார்.
கடந்த மாதம் இதே ஆற்றில் சிறுவன் ஒருவன் முதலையால் கொல்லப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.