பசுபதி பாண்டியன் கொலை-ஜான் பாண்டின் கட்சிப் பிரமுகர் உள்பட 2 பேர் கைது
திண்டுக்கல்: தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்புத் தலைவர் பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் மேலும் 2 பேர் சிக்கியுள்ளனர். இவர்களைப் போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்களில் ஒருவர் பெண் ஆவார்.
ஜனவரி 10ம் தேதியன்று, திண்டுக்கல் நந்தவனப்பட்டியில் உள்ள தனது வீட்டுக்கு வெளியே அமர்ந்திருந்தபோது பசுபதி பாண்டியனை ஒரு கும்பல் சைக்கிளில் வந்து கொடூரமாகக் கொலை செய்தது.
இந்தக் கொலை குறித்துத் தனிப்படைகளை அமைத்துப் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களைச் சேர்ந்த அருளானந்தன் மற்றும் ஆறுமுகசாமி ஆகியோர் கோர்ட்டில் சரணடைந்தனர். அவர்களைப் போலீஸார் காவலில் எடுத்து விசாரித்தபோது, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுபாஷ் பண்ணையார்தான் இந்தக் கொலைக்கு உத்தரவிட்டது என்பது தெரிய வந்தது.
மேலும் கொலையாளிகளுக்கு வீடு எடுத்துக் கொடுத்து தங்க வைத்து உதவி செய்தவர் திண்டுக்கல்லைச் சேர்ந்த நிர்மலா என்பதும் தெரிய வந்தது. மேலும் மொத்தம் 14 பேர் இந்தக் கொலைச் சதியில் இடம் பெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது முத்துப்பாண்டி மற்றும் நிர்மலா ஆகியோரைப் போலீஸார் கைது செய்து இன்று கோர்ட்டில் நிறுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
ஜான்பாண்டியன் கட்சியான தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திண்டுக்கல் மாவட்டத் தலைவராகவும், கரட்டழகன்பட்டி வெள்ளோடு பகுதி ஊராட்சி ஒன்றிய உறுப்பினருமாக இருப்பவர் மு.முத்துப்பாண்டி. 37 வயதான முத்துப்பாண்டி முன்பு பசுபதி பாண்டியனுடன் இணைந்து செயல்பட்டு வந்தவர் ஆவார். பின்னர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் திண்டுக்கல் மாவட்டத் தலைவராகவும் பின்னர் அதிலிருந்து விலகி தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டத்தலைவராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில் நந்தவனப்பட்டி நிர்மலாவை முத்துப்பாண்டி சுபாஷ்பண்ணையாருக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். நிர்மலாவும் தலித் வகுப்பைச் சேர்ந்தவர்தான். அப்போது நிர்மலாவிடம், பசுபதி பாண்டியன் இல்லாமல் போனால் அந்த இடத்திற்கு முத்துப்பாண்டி வரலாம் என சுபாஷ் பண்ணையார் கூறியதாக நிர்மலா போலீசார் விசாரணையில் கூறியுள்ளாராம்.
நிர்மலாவின் சகோதரர் போலீஸ்காரர் என்று தெரிகிறது. தற்போது இந்த வழக்கில் சுபாஷ் பண்ணையார் முதல் எதிரியாக சேர்க்கப்பட்டுள்ளார். ஆறுமுகசாமி மற்றும் அருளானந்தன் 2 மற்றும் 3வது எதிரியாக சேர்க்கப்பட்டுள்ளனர். தலைமறைவாகவுள்ள இன்னொரு கொலையாளி 4வது எதிரியாக அறிவிக்கப்பட்டுள்ளார். நிர்மலா 5வது மற்றும் முத்துப்பாண்டி 6வது எதிரியாக சேர்க்கப்பட்டுள்ளனர்.