ஜல்லிக்கட்டு முடிந்தது... அடுத்து தமிழக காங்கிரஸில் 'மல்லுக்கட்டு' தொடங்குகிறது!
திமுக அதை விட்டால் அதிமுக என்று மாறி மாறி குதிரை சவாரி ஏறி, ஓசியிலேயே எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் என ஏக தடபுடலாக வலம் வரும் வரலாறு கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு கடந்த சட்டசபைத் தேர்தலில் தமிழக மக்கள் பட்டை நாம் போட்டனர். வெறும் ஐந்து தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸுக்கு மக்கள் கையாட்டினர்.
இந்த ஐந்து பேரும் சேர்ந்த சட்டசபை காங்கிரஸ் கட்சிக்குத் தலைவராக இருப்பவர் கோபிநாத். இவர் தங்கபாலு கோஷ்டியைச் சேர்ந்தவர். சமீப காலமாக கோஷ்டிப் பூசல் பெரிய அளவில் வெளியில் தராத அளவுக்கு படு கமுக்கமாக செயல்பட்டு வருகிறார்கள் தமிழக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெரிய தலைகள். அத்தனை பேரும் ஒற்றுமையுடன் இருப்பது போல அடிக்கடி நிகழ்ச்சிகளில் கூடிக் கூடி கலக்கி வருகிறார்கள்.
தங்கபாலு போய் வாசன் கோஷ்டியைச் சேர்ந்த ஞானதேசிகன் புதிய தலைவராக வந்த பின்னர் பெரிய அளவில் கோஷ்டிச் சண்டை எதுவும் நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் 'தலைவர் ஞானதேசிகன் வரலாற்றிலேயே' முதல் முறையாக கோஷ்டிச் சண்டை நடக்கப் போகிறது.
அதாவது தமிழக சட்டசபையில் உள்ள ஐந்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கும் தலைவராக இருப்பவர் கோபிநாத். இவர் தங்கபாலு கோஷ்டியைச் சேர்ந்தவர். தற்போது இவரை மாற்றக் கோரி வாசன் கோஷ்டியில் கதர்ச் சட்டை, வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு களத்தில் குதித்துள்ளனர்.
கோபிநாத் ஓசூர் தொகுதி எம்.எல்.ஏ. ஆவார். தங்கபாலு தலைவராக இருந்தபோது இவரை சட்டசபை காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்து சட்டசபை செயலாளருக்கு கடிதம் எழுதி விட்டனர். ஆனால் மேலிட உத்தரவின்படி இந்த தேர்வு நடக்கவில்லை என்பது இப்போது வாசன் கோஷ்டியினர் வாசிக்கும் புகாராகும்.
இதில் வேடிக்கை என்னவென்றால் கோபிநாத்துக்கு சுத்தமாக தமிழ் தெரியாதாம். தத்தித் தத்தித்தான் பேசுவாராம். இவர் எப்படி தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டசபை தலைவராக இருக்கலாம் என்பது வாசன் கோஷ்டியினரின் முக்கியக் கேள்வியாகும். 3 முறை ஓசூர் எம்.எல்.ஏவாக கோபிநாத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இங்கு கவனிக்கத்தக்கது.
கோபிநாத் போக பட்டுக்கோட்டை ரங்கராஜன், விளவங்கோடு விஜயதாரணி, கொளச்சல் ஜே.ஜி.பிரின்ஸ், கிள்ளியூர் ஜான் ஜேக்கப் ஆகியோர் காங்கிரஸ் சார்பி்ல உறுப்பினர்களாக உள்ளனர்.
இவர்களில் ரங்கராஜன், ஜான் ஜேக்கப் ஆகியோர் வாசன் கோஷ்டியைச் சேர்ந்தவர்கள். விஜயதாரணி, மணிசங்கர அய்யர் கோஷ்டியைச் சேர்ந்தவர்.
தற்போது ரங்கராஜன் அல்லது ஜேக்கப்பை தலைவராக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்களாம். தற்போது ரங்கராஜன் துணைத் தலைவராக இருக்கிறார். ஜேக்கப் கொறடாவாக உள்ளார்.
விரைவில் சத்தியமூர்த்தி பவனில் எம்.எல்.ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. அப்போது பஞ்சாயத்து வைக்க வாசன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தீர்மானித்திருப்பதாக தெரிகிறது.