பசுபதி பாண்டியனைக் கொன்ற 'கோழி' அருள் சென்னையில்.. அமுக்கிப் பிடிக்க போலீஸ் தீவிரம்!
சென்னை: பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி கோழி அருள் சென்னையில் பதுங்கியிருப்பதாக வந்த தகவலைத் தொடர்நது தனிப்படை போலீஸார் விரைந்துள்ளனர். அவரைப் பிடிக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதேசமயம், பெங்களூருக்கும் ஒரு குழு பறந்துள்ளது.
திண்டுக்கல்லில் கொலை செய்யப்பட்ட பசுபதி பாண்டியன் கொலை வழக்கில், சுபாஷ் பண்ணையார் உள்பட 14 பேருக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளதைத் தொடர்ந்து அவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதில், 3 பேர் கோர்ட்டில் சரணடைந்துள்ளனர். 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ளவர்கள் கேரளா, மும்பை, சென்னை, பெங்களூர் என பல்வேறு பகுதிகளில் பதுங்கியுள்ளதாக தெரிகிறது.அவர்களைப் பிடிக்க கிட்டத்தட்ட 30 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவர்களில் கோழி அருள் என்பவர் சென்னையில் பதுங்கியிருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதேசமயம், அவர் பெங்களூரில் இருப்பதாகவும் இன்னொரு தகவல் வந்துள்ளது. இதையடுத்து இரு ஊர்களுக்கும் தனிப்படைகள் விரைந்துள்ளன.
கோழி அருள் தப்பி விடாமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் போலீஸார் முடுக்கி விட்டுள்ளனர். சென்னையில் அவர் பதுங்கியிருப்பதாக கருதப்படும் பகுதிகளில் போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.