புதிதாக 10,000 பேரை பணியில் சேர்க்கும் எச்சிஎல்
சென்னை: உலகம் முழுவதும் பொருளாதார ஸ்திரத்தன்மை குலைந்து வரும் நிலையில், பல்வேறு நிறுவனங்களும் புதிதாக ஆட்களை பணிக்குச் சேர்ப்பதை நிறுத்தியும், மட்டுப்படுத்தியும் வரும் நிலையில், முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான எச்சிஎல் புதிதாக 10,000 பேரை பணியில் அமர்த்தி வருகிறது.
மற்ற பெரிய சாப்ட்வேர் நிறுவனங்கள் எல்லாம் பணியாளர்களை அதிக அளவில் சேர்க்கும்போது அதை பெருமளவில் விளம்பரப்படுத்திக் கொள்வது வழக்கம். ஆனால், எச்சிஎல் இந்த விஷயத்தில் மிகவும் மாறுபட்டது.
சில ஆண்டுகளுக்கு முன் உலகளவிலான பொருளாதார தேக்கத்தால் பல சாப்ட்வேர் நிறுவனங்கள், வேலைக்கான ஆர்டர்களைக் கொடுத்துவிட்டு பின்னர் பணியாளர்களைச் சேர்ப்பதை தவிர்த்த நிலையிலும் கூட, எச்சிஎல் ஆயிரக்கணக்கானோரை பணியில் அமர்த்தியது.
கடந்த 2008-09ம் ஆண்டில் இந்த நிறுவனம் புதிதாக 15,000 ஊழியர்களை சேர்த்தது. அதே போல பொருளாதார மந்த நிலையிலும் கூட 20 சதவீத புதிய ஆர்டர்களைப் பிடித்துக் காட்டியது. இந்த காலகட்டத்தில் மற்ற சில முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்களின் வருவாய் சரிந்தது குறிப்பிடத்தக்கது.
இப்போது ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பொருளாதார சிக்கல்கள் தொடர்ந்து கொண்டிருந்தாலும் புதிதாக 10,000 பேரை பணியில் அமர்த்த இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில் பெரும்பாலான பணிகள் வெளிநாடுகளில் உருவாக்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பொருளாதார சூழ்நிலையில் சரியில்லாதபோது மிகச் சிறந்த பணியாளர்கள், குறைந்த ஊதியத்துக்குக் கிடைப்பது வழக்கம். இதைத் தான் எச்சிஎல் தனக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறது.
பல நாடுகளில் சாப்ட்வேர் வேலைவாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில், பலர் வேலைவாய்ப்புகளை இழந்துள்ள நிலையில், அவர்களை வளைத்துப் போட்டு வருகிறது எச்சிஎல்.
அதே போல ஐடிசி, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட், லூபின், எடில்வைஸ், மெர்செர் ஆகிய நிறுவனங்களும் இந்த ஆண்டில் நூற்றுக்கணக்கில் புதிய ஊழியர்களை சேர்க்கத் திட்டமிட்டுள்ளன.
நல்ல விஷயம் தான்..