மா.செ. பதவியிலிருந்தும் வேலுமணி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி நீக்கம்!
சென்னை: அமைச்சர் பதவியை இழந்துள்ள எஸ்.பி.வேலுமணி மற்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோரிடமிருந்து மாவட்டச் செயலாளர் பதவிகளையும் முதல்வர் ஜெயலலிதா தூக்கியுள்ளார்.
இவர்கள் தவிர மேலும் இருவரின் மாவட்டச் செயலாளர் பதவிகளும் பறிக்கப்பட்டுள்ளன. சசிகலா ஆதரவு அமைச்சர்களான அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் நேற்று நீக்கப்பட்டனர். இதையடுத்து புதிய அமைச்சர்களாக என்ஆர்சிவபதி மற்றும் முக்கூர் சுப்பிரமணியம் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வேலுமணி கோவை புறநகர் மாவட்டச் செயலாளராக இருந்து வந்தார். அதேபோல அக்ரி கிருஷ்ணமூ்ர்த்தி திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்து வந்தார்.
தற்போது இருவரும் அப்பொறுப்புகளிலிருந்து தூக்கப்பட்டு விட்டனர். அவர்களுக்குப் பதில் வேலுமணி இடத்தில் வேளாண்மைத்துறை அமைச்சர் தாமோதரன் நியமிக்கப்பட்டுள்ளார். அக்ரி வகித்து வந்த பொறுப்பு, அமைச்சராகியுள்ள முக்கூர் சுப்பிரமணியத்திடம் மீண்டும் தரப்பட்டுள்ளது.
திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளராக இருந்து வந்த பாலசுப்பிரமணியன் தூக்கப்பட்டு அவருக்குப் பதில் அமைச்சராகியுள்ள என்.ஆர்.சிவபதி நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல புதுக்கோட்டை மாவட்டச் செயலாளராக விஜயபாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு இப்பொறுப்பில் ராமையா இருந்தார்.