அடையாள அட்டை பிரச்சினை : நந்தன் நிலேகானியுடன் ப.சி சமரசம்
டெல்லி : ஆதார்' அடையாள அட்டை தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கும், ஆதார் அடையாள அட்டை ஆணைய தலைவர் நந்தன் நிலேகானிக்கும் இடையே நிலவிய மோதல் முடிவுக்கு வந்துள்ளது. இதனையடுத்து மேலும் 40 கோடி பேரை ஆதார்' அடையாள அட்டைக்கு பதிவு செய்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ஆதார் - தேசிய அடையாள அட்டை
இந்தியாவில் இரண்டு விதமான அடையாள அட்டை வழங்கும் பணியும், அதுதொடர்பான கணக்கெடுப்பு பணியும் நடந்து வருகின்றன. தேசிய மக்கள்தொகை பதிவகம் சார்பில், பன்முக தேசிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இதற்காக, ஒவ்வொருவரிடமும் உடற்கூறுகள் உள்ளிட்ட 15 விதமான தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.
மற்றொன்று, திட்ட கமிஷனின் ஏற்பாட்டில், ஆதார்' அடையாள அட்டை வழங்க ஒவ்வொருவரிடமும் 5 விதமான தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்தது. ஆதார்' அட்டை வழங்கும் பணியால் தேச பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படும் என்று ப.சிதம்பரம் தெரிவித்திருந்தார். இதற்கு திட்ட கமிஷன் ஆட்சேபணை தெரிவித்தது. இதனால், மத்திய உள்துறை அமைச்சகம்-திட்ட கமிஷன் இடையே மோதல் நிலவியது. இதனால் ஆதார்' அடையாள அட்டை தொடர்பான பணிகள் பாதிக்கப்பட்டன.
மோதல் முடிந்தது
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம்-திட்ட கமிஷன் இடையிலான மோதலுக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஆதார் அடையாள அட்டை ஆணையம் தொடர்பான அமைச்சரவைக் கமிட்டி கூட்டத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. ஆதார் அடையாள அட்டை ஆணையத்தின் யோசனைக்கு இக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதாவது, 16 மாநிலங்களில் மேலும் 40 கோடி பேரை ஆதார்' அடையாள அட்டைக்காக பதிவு செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்காக, கூடுதலாக ரூ.5 ஆயிரத்து 791 கோடியே 74 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஆதார் அடையாள அட்டை வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள யு.ஐ.டி.ஏ.ஐ. எனப்படும் இந்திய தனி அடையாள அட்டை ஆணையம், 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அத்திட்டத்தில் மக்களின் விவரங்களைப் பதிவு செய்யும்.
அதேநேரத்தில் தேசிய மக்கள் தொகைப் பதிவு அமைப்பான என்.பி.ஆர். மற்ற மாநிலங்களில் அந்தப் பணியை மேற்கொள்ளும். அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் அந்தப் பணிகளை நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
அமைச்சரவை கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், சுமார் 95 அல்லது 96 சதம் பயோமெட்ரிக் பதிவுகளை ஒரே அமைப்பு மேற்கொள்ளும் என்றும், பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான கவலைகளை யு.ஐ.டி.ஏ.ஐ. கவனத்தில் கொள்ளும் என்றும் தெரிவித்தார். இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டபிறகு, அது நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு எடுத்துச் செல்லப்படும் என்றும், மசோதா ஒன்றும் கொண்டுவரப்படும் என்றும் சிதம்பரம் தெரிவித்தார்.
8 வாரங்களில் தீர்வு
இந்த முடிவுக்கு, ஆதார் அடையாள அட்டை ஆணைய தலைவர் நந்தன் நிலேகானி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்த பாதுகாப்பு தொடர்பான கவலைகளை 8 வாரங்களுக்குள் ஆய்வு செய்து தீர்வு காண்பதாக அவர் உறுதி அளித்தார். ஆதார்' அடையாள அட்டைக்காக தகவல் சேகரிக்கும் பணிகள், ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டு, அடுத்த ஆண்டு ஜுன் மாதம் நிறைவடையும்' என்றும் அவர் கூறினார். இதனையடுத்து ஆதார் – தேசிய அடையாள அட்டை வழங்குவதில் இருந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளது. இதனிடையே மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இரண்டு திட்டங்களையும் சுமூகமாக அமல்படுத்துவது தொடர்பான வழிமுறைகளை அமைச்சகங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பு குழு இறுதி செய்யும்' என்று கூறப்பட்டுள்ளது.