ராவணன் மீது பாயுமா குண்டாஸ்?
சசிகலாவின் சித்தப்பா மருமகனான ராவணன் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். கோவை காரமடையை சேர்ந்த கான்ட்ராக்டரை கடத்தி ரூ.10 லட்சம் பறித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
தற்போது ராவணன் மீது ஏகப்பட்ட புகார்கள் கிளம்பியுள்ளன. திருப்பூரை சேர்ந்த தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகாரில், மணல் கான்ட்ராக்ட் கொடுப்பதாக கூறி ராவணன் ரூ.1 கோடி பெற்று மோசடி செய்ததாக கூறியிருந்தார். இதையடுத்து ராவணன் மீது மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் சென்னை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதேபோல, நீலகிரி மாவட்ட அதிமுக முன்னாள் செயலாளர் செல்வராஜ் சாலை விபத்தில் பலியானது தொடர்பாக அவரது மகன் சதீஷ்குமார் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து புகார் அளித்தார். அந்த புகார், தற்போது கோவை மாவட்ட போலீசுக்கு அனுப்பப்பட்டு நேற்று முதல் விசாரணை தீவிரமடைந்துள்ளது.
செல்வராஜ் மகன், விபத்துக்குள்ளான கார் மற்றும் லாரி டிரைவர் ஆகியோரிடம் மீண்டும் விசாரணை நடத்துகின்றனர். இதில் கிடைக்கும் விவரங்கள் அடிப்படையில் இந்த விபத்து வழக்கு கொலை வழக்காக மாற்றப்படலாம் என தெரிகிறது.
இந்த விவகாரத்தில் ராவணனுக்கு தொடர்பிருப்பது தெரியவந்தால், அவர் மீது வழக்கு பதிந்து காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
அதேபோல் பி.என்.புதூரை சேர்ந்த பாஜக மாவட்டத் துணைத் தலைவர்ராதாகிருஷ்ணனின் நில அபகரிப்பு புகார் குறித்தும் பூர்வாங்க விசாரணையை கோவை மாநகர போலீசார் துவக்கி உள்ளனர்.
தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருப்பதாலும், கொலை குற்றச்சாட்டும் எழுந்திருப்பதாலும் ராவணனை காவலில் எடுத்து தீவிரமாக விசாரிக்க காவல்துறை தீர்மானித்திருக்கிறது. அவர் மீதான புகார்கள் மேலும் அதிகரித்தால் அவரைக் குண்டர் சட்டத்தின் கீழும் கைது செய்ய காவல்துறை ஆயத்தமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
முதலில், விரைவில் ராவணனை போலீஸார் காவலில் எடுக்கவுள்ளனர். இதற்கான மனு இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
ராவனணன் வாய் திறந்து தனது லீலைகளைச் சொல்வாரா என்ற எதிர்பார்ப்பு ஒருபக்கம் அதிகரித்து வந்தாலும், அவரால் வாயைத் திறந்தால் தங்களுக்கு ஆபத்தாகி விடுமே என்ற அச்சத்தால் அவரால் பலனடைந்தவர்கள் பீதியில் இருப்பதாக கூறப்படுகிறது.
'ராவணன்' என்றாலே ஆபத்துதானே...!